சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றது அம்பலம்
சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றது அம்பலம்
ADDED : ஆக 10, 2025 01:46 AM
மூணாறு:மூணாறு அருகே தேவிகுளம் சார்பதிவாளர் அலுவலகம் உட்பட மாநிலத்தில் 72 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில் பல லட்ச ரூபாய் சிக்கியது.
கேரளாவில் இரு தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 72 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அதில் பல லட்ச ரூபாய் சிக்கிய நிலையில் ' கூகுள் பே' மூலம் லஞ்ச பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. அலுவலகங்களில் சிக்கிய பணத்தின் பட்டியலை லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்டனர்.
அதில் இடுக்கி மாவட்டம், மூணாறு தேவிகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.91,500, உடும்பன்சோலை அலுவலகத்தில் ரூ. 15,000 சிக்கின. வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் ' கூகுள் பே' மூலம் பல முறை ரூ.3,37,300 லஞ்சம் பெற்றதாக தெரியவந்தது.
திருவனந்தபுரம் கழக்கூட்டம் அலுவலகத்தில் அதிகாரியிடம் இருந்து ரூ.8500, பத்தனம்திட்டா கோணி அலுவலகத்தில் ஏஜன்ட்டிடம் இருந்து ரூ.11,500, அலுவலகத்தில் ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து ரூ.24,300, பத்தனம்திட்டா அலுவலகத்தில் இருந்து ரூ.6500 ஆகியவை சிக்கின. அதேபோல் செங்கனூர் அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் கூகுள் பே மூலம் ரூ.2 ஆயிரம் பெற்றது கண்டு பிடிக்கப்பட்டது.
கொச்சி அலுவலகத்தில் இரண்டு அதிகாரிகளிடம் இருந்து ரூ.18,800, திருப்புணித்துறையில் இரண்டு அதிகாரிகளிடம் இருந்து ரூ.30,610, மலப்புரத்தில் அதிகாரியிடம் இருந்து ரூ.1,06,000, நிலம்பூரில் மூன்று அதிகாரிகளிடம் இருந்து ரூ.1,03,030 கல்பற்றாவில் ரூ.1410, காசர்கோட்டில் ரூ.1,89,680 ஆகியவை சிக்கின.
தவிர சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு லஞ்ச பணத்துடன் வந்த 15 ஏஜன்ட்டுகளிடம் இருந்து ரூ.1,46,375, ஏழு சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பாதுகாக்கும் அறைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.37,850, நான்கு அதிகாரிகளிடம் இருந்து ரூ.15,190 சிக்கின. தவிர பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு கூகுள் பே மூலம் ரூ.9,65,905 லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது.
அதிகாரிகள், ஏஜன்ட்டுகள் ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு நடத்தி விரிவான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர் மனோஜ்ஆப்ரகாம் தெரிவித்தார்.