காங்கிரஸ் அலுவலகங்கள் ஆக்கிரமிப்பு மம்தா கட்சியினர் மீது குற்றச்சாட்டு
காங்கிரஸ் அலுவலகங்கள் ஆக்கிரமிப்பு மம்தா கட்சியினர் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 31, 2011 10:52 PM
கோல்கட்டா:'காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை வலுக்கட்டாயமாக, திரிணமுல்
காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றி உள்ளனர்.
இந்த பிரச்னையை, திரிணமுல்
காங்கிரசின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, தலையிட்டு தீர்க்க
வேண்டும்' என்று, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சாரியா
கேட்டுக் கொண்டுள்ளார்.மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க, திரிணமுல்
காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து, தேர்தலில்
போட்டியிட்டன. தேர்தல் முடிவில், திரிணமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி
பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆட்சியில் காங்கிரசும்
பங்கேற்றுள்ளது.இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு
மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை, திரிணமுல் காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக கைப்பற்றி உள்ளனர் என, எழுத்து
மூலமான 61 புகார்கள், அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப்
பட்டாச்சாரியாவுக்கு வந்துள்ளன.பிரதீப் பட்டாச்சாரியா இதுகுறித்து
கூறுகையில், ''திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர், எங்களின்
அலுவலகங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றிக் கொண்டனர்.தலைநகரில் இதுபோல், 25
சம்பவங்கள் நடந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் நிலை
தொண்டர்கள், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் ஊடுருவியதால், இவ்வாறு சில
இடங்களில் பிரச்னைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து எனக்கு எழுத்துப்பூர்வமாக
61 புகார்கள் வந்துள்ளன.இந்த பிரச்னையை தீர்க்க, முதல்வர் மம்தா பானர்ஜி
உதவ வேண்டும் என்று கோரி, நாளை (இன்று) கடிதம் எழுத உள்ளேன். திரிணமுல்
கட்சியுடனான கூட்டணி நல்ல முறையில் உள்ளது. இடையில் இதுபோன்ற சிறு
பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த பிரச்னையை நாங்கள் தீர்த்துக்
கொள்வோம்,'' என்றார்.