அதிரடிப் படையினர் நடத்திய ஒத்திகைகண்ணீர் புகையில் சிக்கினார் முதல்வர்
அதிரடிப் படையினர் நடத்திய ஒத்திகைகண்ணீர் புகையில் சிக்கினார் முதல்வர்
ADDED : ஆக 01, 2011 04:22 AM

புதுச்சேரி:அதிவிரைவு அதிரடிப் படையினர் நடத்திய ஒத்திகையின்போது, முதல்வர்
ரங்கசாமி கண்ணீர் புகையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் பதட்டம் நிறைந்த பகுதிகளைக் கண்டறிய, அதிவிரைவு அதிரடிப்
படையைச் சேர்ந்த, 91 பேர் வந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவது குறித்து,
அதிவிரைவு அதிரடிப் படையினரின் ஒத்திகை, கோரிமேடு போலீஸ் மைதானத்தில்
நேற்று நடந்தது.காவிரியில் வெள்ளப் பெருக்கைத் தடுக்க வலியுறுத்தி, ஒரு
கும்பல் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது போல
சித்தரிக்கப்பட்டு, ஒத்திகை நடந்தது. முதல்வர் ரங்கசாமி ஒத்திகையைத்
துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
கலவரத்தை ஒடுக்க கையாளப்படும், 6 வகையான வியூகம் குறித்த அறிமுகம்
நடந்தது.அடுத்து, மைதானத்தில் கூடிய கலவரக்காரர்கள் மீது, அதிரடிப் படை
வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து கலைக்க முற்பட்டனர். அப்போதும் கலையாத
கலவரக் கும்பல் கற்களை வீசியதால், அதிவிரைவுப் படையினர் கண்ணீர் புகை
குண்டுகளை வீசினர்.கண்ணீர் புகை குண்டுகள் மைதானத்தில் நாலாபுறமும் சிதறி
விழுந்து வெடித்தன. அப்போது, காற்று திசை மாறி வீசியதால், முதல்வர்
அமர்ந்திருந்த மேடையின் பக்கம், கண்ணீர் புகை மண்டலம் சூழ்ந்தது.
மேடையிலிருந்த முதல்வர் ரங்கசாமி, டி.ஜி.பி., சுக்லா, சீனியர் எஸ்.பி.,
சந்திரன் உட்பட, போலீஸ் அதிகாரிகள் கண்ணீர் புகையில் சிக்கினர்.கண்
எரிச்சல் ஏற்பட்டு, கண் கலங்கி அவதிப்பட்டனர். இதனைக் கண்ட முதல்வரின்
பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே முதல்வரை அங்கிருந்து,
பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். கண் எரிச்சலில் அவதிப்பட்ட முதல்வர்
ரங்கசாமி, தண்ணீர் பாட்டிலை வாங்கி முகத்தைக் கழுவினார். எனினும் கண்
எரிச்சல் குறையாததால், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.இதனால்,
ஒத்திகை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின் தொடர்ந்து நடந்தது.