இனி பாடப்போவதில்லை; ஓய்வை அறிவித்தார் பிரபல பாடகர் அர்ஜித் சிங்
இனி பாடப்போவதில்லை; ஓய்வை அறிவித்தார் பிரபல பாடகர் அர்ஜித் சிங்
ADDED : ஜன 28, 2026 09:40 AM

மும்பை: பாலிவுட் முன்னணி பாடகர் அர்ஜித் சிங், இனி சினிமா பட பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னணி பாடகராக வலம் வந்த அர்ஜித் சிங், தும் ஹி ஹோ, கபீரா, சன்னா மேரையா, கேசரியா உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடித்த 24 படத்தில் இடம்பெற்ற 'நான் உன் அழகினிலே' பாடலை பாடினார். இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது வசீகரிக்கும் குரலால், இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.
தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி வந்த அர்ஜித் சிங், இனி பின்னணி பாடல்களை பாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும், ஆல்பம் பாடல்களை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; 'அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகளாக என் பாடல்களைக் கேட்டு, எனக்கு இவ்வளவு அன்பைக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இனிமேல் நான் பின்னணிப் பாடகர் வாய்ப்புகள் எதையும் ஏற்கப் போவதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் நான் விடைபெறுகிறேன். இது ஒரு அற்புதமான பயணம்,' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அர்ஜித் சிங்கின் இந்த முடிவு சினிமா பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

