அசாமில் சாலை விபத்து வன்முறையாக மாறியது; ஒருவர் அடித்துக் கொலை, வீடுகளுக்கு தீ வைப்பு
அசாமில் சாலை விபத்து வன்முறையாக மாறியது; ஒருவர் அடித்துக் கொலை, வீடுகளுக்கு தீ வைப்பு
ADDED : ஜன 20, 2026 10:21 PM

திஸ்பூர்: அசாமில் சாலை விபத்தின் போது ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாற ஒருவர் அடித்துக கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதால் இணைய வசதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கோக்ரஜார் மாவட்டத்தில் கவுரிநகர்-மன்சிங் சாலையில் போடோ இனத்தைச் சேர்ந்த 3 பேர் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்வதை கண்ட உள்ளூர் ஆதிவாசி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள கால்நடைகளை திருடி விட்டு தப்பி செல்வதாக எண்ணியுள்ளனர்.
உடனடியாக அவர்களை, ஊர் மக்கள் துரத்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் அவ்வழியாக சென்ற ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த இருவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் வந்தவர்களை ஊர் மக்கள் தாக்கி, அந்த காருக்கும் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் காரில் இருந்தவர்களில் ஒருவர் உயிரிழக்க, அங்கு பதற்றம் உருவானது. உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி அங்கு ஏராளமானோர் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
டயர்களை எரித்து தங்களின் எதிர்ப்பையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர். இந்த சம்பவம், போடோ மற்றும் ஆதிவாசி மக்கள் இடையேயான வன்முறையாக மாறியது. கார் டயர்கள், வீடுகளை தீயிட்டு கொளுத்தினர்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், வதந்திகள் பரவாமல் இருக்கும் வகையில் இணைய சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்காக அதி விரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இணைய வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

