காலி நாற்காலியுடன் காத்திருக்கிறார் 'ஆக்ஸ்போர்டு' அதிஷி; இருந்தாலும், இதெல்லாம் 'டூ மச்'
காலி நாற்காலியுடன் காத்திருக்கிறார் 'ஆக்ஸ்போர்டு' அதிஷி; இருந்தாலும், இதெல்லாம் 'டூ மச்'
ADDED : செப் 23, 2024 01:32 PM

புதுடில்லி: டில்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அதிஷி, கெஜ்ரிவால் அமர்ந்திருந்த நாற்காலியில் அமராமல், பக்கத்தில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து பணியாற்றும் படத்தை வெளியிட்டுள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 5 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்த, கெஜ்ரிவாலுக்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். 'ஊழல்வாதி அல்ல என நிரூபணம் ஆன பிறகு தான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன். வரும் சட்டசபை தேர்தலில் நான் நேர்மையானவன் என மக்கள் நம்பி ஓட்டளித்தால் மட்டுமே மீண்டும் பதவியில் அமர்வேன்' என கெஜ்ரிவால் கூறிவிட்டார்.
குருவே அவர் தான்!
இதனால் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் அதிஷி, பதவியேற்றுக் கொண்டார். நிருபர்கள் சந்திப்பில், 'டில்லியின் முதல்வர் எப்போதும் கெஜ்ரிவால் தான். எனக்கு குருவே அவர் தான்' என அன்பு மழையை பொழிந்தார்.
அந்த நாற்காலி அவருக்குத்தான்!
இந்நிலையில் இன்று அலுவலகம் வந்து பணிகளை தொடங்கிய அதிஷி, கெஜ்ரிவால் அமர்ந்து நிர்வாகம் செய்த நாற்காலியில் அமரவில்லை. அதற்கு பக்கத்திலேயே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டார். அதை படம் எடுத்து தன் சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இந்த நாற்காலி கெஜ்ரிவாலுக்காக காத்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். காலி நாற்காலிக்கு பக்கத்தில் இன்னொரு நாற்காலியில் அதிஷி அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முதல்வர் அதிஷி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பட்டம் பெற்றவர். அவரே இப்படி காலி நாற்காலி விட்டு வைத்திருப்பது, இணையத்தில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தான் அடிமைத்தனம் என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர். இது கெஜ்ரிவால் மீதான பக்தியா, இல்லை அந்த சேரில் உட்கார்ந்தால் நாமும் சிறை செல்வோம் என்ற பயமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.