ஹிந்துக்கள் மீதான தாக்குதலையும், கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்தக்கூடாது: ஷாருக்கானுக்கு சசி தரூர் ஆதரவு
ஹிந்துக்கள் மீதான தாக்குதலையும், கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்தக்கூடாது: ஷாருக்கானுக்கு சசி தரூர் ஆதரவு
UPDATED : ஜன 02, 2026 10:38 PM
ADDED : ஜன 02, 2026 10:10 PM

திருவனந்தபுரம்: '' வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடக்கும் தாக்குதலையும், கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்தக்கூடாது,'' என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை , ஷாருக்கானின் கோல்கட்டா அணி ஏலத்தில் எடுத்ததற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர் கூறியதாவது: வங்கதேசத்தில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவத்தை கிரிக்கெட் உடன் தொடர்புபடுத்தக்கூடாது. சில விஷயங்களை தொடர்புபடுத்துவதை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சரியானதைச் செய்யுமாறு வங்கதேசத்தை வலியுறுத்துகிறோம். இது தொடர வேண்டும்.
முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒரு கிரிக்கெட் வீரர். வஙகதேசத்தில் நடப்பதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்புப் பேச்சு அல்லது தாக்குதல்களையும் ஊக்குவித்ததாகவோ அல்லது ஆதரித்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. எனவே இரண்டையும் கலப்பது நியாயம் இல்லை.
நமது அண்டை நாடுகள் அனைத்தையும் தனிமைப்படுத்தும் நாடாக நாம் மாறினால், அவர்களில் எவருடனும் யாரும் விளையாட முடியாது. பிறகு எப்படி நன்மை பயக்கும். இது முற்றிலும் விளையாட்டு முடிவு. இதில் அரசியல் வர அனுமதிக்கக்கூடாது. நாம் மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தை சூழ்ந்துள்ளோம். அவர்களை தனிமைப்படுத்த முடியாது. அவர்களுடன் விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

