ADDED : டிச 25, 2024 08:20 AM

பெங்களூரு : அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், முதல் இரண்டு கி.மீ.,க்கு 30 முதல் 40 ரூபாயும்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கு 15 முதல் 20 ரூபாயும் உயர்த்த வேண்டும்' என போக்குவரத்துத் துறைக்கு, ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க பொதுச் செயலர் ருத்ரமூர்த்தி கூறியதாவது:
ஆண்டுதோறும், ஆட்டோவுக்கான நிர்வகிப்பு செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், உதிரி பாகங்கள், டயர்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், 2021க்கு பின், ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
பள்ளி கட்டணம், மருத்துவமனை செலவுகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
இதனால் எங்களால் எப்படி குடும்பத்தை காப்பாற்ற முடியும்? பலரும் கடன் வாங்கி, வட்டி கட்டியே நொந்து போகின்றனர்.
அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. ஆனால் நாங்களோ, மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல், பழைய கட்டணத்திலேயே வாழ்க்கை நடத்தி வருகிறோம். முன்பெல்லாம், கிடைக்கும் வருமானத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி நாள்தோறும் 100 ரூபாய் கொடுத்தும்; மீதி பணத்தை சேமித்தும் வந்தோம். ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வால், குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடிவதில்லை.
மங்களூரு, உடுப்பி, ஷிவமொக்காவில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சட்ட விரோதமாக இயங்கும் பைக் டாக்சிகளால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.
பைக் டாக்சி சேவை, கர்நாடகாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சில ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளை சந்தித்து, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், முதல் 2 கி.மீ.,க்கு 30 முதல் 40 ரூபாயும்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கு 15 முதல் 20 ரூபாயும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.
நேற்று (முன்தினம்) இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.