அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: தடயவியல் தணிக்கையாளரையும் சேர்க்க உத்தரவு
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: தடயவியல் தணிக்கையாளரையும் சேர்க்க உத்தரவு
ADDED : ஜூலை 28, 2026 12:49 AM

புதுடில்லி: 'அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் தடயவியல் தணிக்கையாளரையும் சேர்க்க வேண்டும்' என, உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோவிலில், பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
முறைகேடு
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தர பிரதேச அரசு எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இக்குழு, காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடுகள் செய்ததாக கோவில் ஊழியர்கள் எட்டு பேரை பிடித்து, அவர்களிடம் இருந்து கோவில் பணமும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், நன்கொடைகள் முறைகேடு தொடர்பாக புகாரை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும், கோவிலை நிர்வகித்து வரும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிதியை தணிக்கை செய்ய வேண்டும் என கோரி, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
சீர்திருத்தம்
அப்போது உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''நன்கொடைகள் முறைகேடு குறித்து விசாரிக்க போலீஸ் ஐ.ஜி., கிரண் தலைமையில் நான்கு பேர் கொண்ட புதிய சிறப்பு புலனாய்வு குழுவை கடந்த 25ம் தேதி மாநில அரசு அமைத்தது. விசாரணை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது,'' என்றார்.
இதை குறித்துக் கொண்ட நீதிபதிகள், ''விசாரணை முழு வெளிப் படைத்தன்மையுடன் நடக்க வேண்டும். இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவில் தடயவியல் தணிக்கையாளரையும் சேர்க்க வேண்டும். உரிய சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்,'' என உத்தரவிட்டனர்.
மேலும், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.
