'பேட்மின்டன்' மாநில போட்டி பெங்., மாணவர்கள் 'சாம்பியன்'
'பேட்மின்டன்' மாநில போட்டி பெங்., மாணவர்கள் 'சாம்பியன்'
ADDED : அக் 18, 2024 07:26 AM

பட்டய கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான பேட்மின்டன் போட்டிகள், மைசூரு பல்கலைக்கழக மைதானத்தில் நடந்து முடிந்தது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த கல்லுாரிகளின் மாணவ - மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.
மாணவியர், மாணவர்களுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. மாணவியர் பிரிவில் பெங்களூரு வடக்கு, மைசூரு அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணிகளும் தங்கள் இலக்கை நோக்கி ஆர்வத்துடன் விளையாடினர். 2 - 1 கணக்கில், மைசூரு அணியை வீழ்த்தி, பெங்களூரு வடக்கு அணி கோப்பையை வென்றது.
மாணவர்கள் பிரிவில், பெங்., தெற்கு - தட்சிண கன்னடா அணிகள் மோதின. இறுதியில், 2 - 1 கணக்கில், தட்சிண கன்னடா அணியை வீழ்த்தி, பெங்., தெற்கு சாம்பியன் ஆனது.
இதுபோன்று, சிங்கிள்ஸ் மாணவியர் பிரிவில், மைசூரின் தியா, 21 - 8, 21 - 8 என்ற கணக்கில், பெங்., வடக்கு அனன்யாவை வீழ்த்தினார். டபுள்ஸ் மாணவியர் பிரிவில், பெங்., வடக்கு ருஜுலா - மவுனிதா ஜோடி, 21 - 3, 21 - 13 என்ற கணக்கில், மைசூரின் திவ்யா - சஞ்சனா ஜோடியை வீழ்த்தினர்.
மாணவியர் ரிவர்ஸ் சிங்கிள்ஸ் பிரிவில், பெங்., வடக்கு ருஜுலா, 21 - 6, 21 - 6 என்ற கணக்கில், மைசூரின் அனன்யாவை வீழ்த்தி, வெற்றி பெற்றார்.
மாணவர் சிங்கிள்ஸ் பிரிவில், பெங்., தெற்கு தியான், 21 - 5, 21 - 5 என்ற கணக்கில், தட்சின கன்னடாவின் அன்சுலை வீழ்த்தினார்.
மாணவர் டபுள்ஸ் பிரிவில், தட்சிண கன்னடாவின் ஆர்யா - திலக் ஜோடி, 18 - 21, 21 - 14, 21 - 13 என்ற கணக்கில், பெங்., தெற்கு சுமித் - கிரிஷ் ஜோடியை வீழ்த்தினர்.
மாணவர் ரிவர்ஸ் சிங்கிள்ஸ் பிரிவில், பெங்., தெற்கு கிரிஷ், 10 - 21, 21 - 11, 21 - 19 என்ற கணக்கில், மைசூரின் பாவேஷை வீழ்த்தினார்
. - நமது நிருபர் -