பல்லாரி காங்., - எம்.எல்.ஏ., வீடு, அலுவலகத்தில் 'ரெய்டு'
பல்லாரி காங்., - எம்.எல்.ஏ., வீடு, அலுவலகத்தில் 'ரெய்டு'
ADDED : பிப் 10, 2024 11:54 PM

பல்லாரி : பல்லாரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் வீடு, அலுவலகம், கல் குவாரிகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பல்லாரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி, 34. தொழில் அதிபரான இவர், பல்லாரியில் கிரானைட் தொழிற்சாலை, கொப்பால் குகனுாரில் கல் குவாரி நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கினார்.
இதையடுத்து, அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை ஆய்வு செய்ததில், பரத் ரெட்டி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கருதினர். இது குறித்து அமலாக்கத்துறைக்கு அவர்கள் முறைப்படி தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று பல்லாரி மொகா சாலையில் உள்ள எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் வீடு, அலுவலகம், அவரது தந்தை சூரியநாராயண ரெட்டியின் அலுவலகம், சித்தப்பா பிரதாப் ரெட்டியின் வீடு, உறவினர் சதீஷ் ரெட்டியின் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.
காலை 6:30 மணிக்கு சோதனை துவங்கியது. பெங்களூரில் இருந்து வந்த 20 அதிகாரிகள், அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிக்கிய சில சொத்து ஆவணங்களை, அமலாக்கத்துறையினர் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கல் குவாரியிலும் சோதனை நடந்தது.
முன்னதாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்து, பரத் ரெட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'லோக்சபா தேர்தலில் பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ளது. இதனால், பரத் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்தி, அவரை பயமுறுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது' என, ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.
சில தினங்களுக்கு முன், கோலார் மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
பரத் ரெட்டியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அமைப்புகள், பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகர்களாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.