சபரிமலையில் அறக்கட்டளை அமைப்புகளுக்கு தடை; பக்தர்களுக்கு சிரமம் அளிப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
சபரிமலையில் அறக்கட்டளை அமைப்புகளுக்கு தடை; பக்தர்களுக்கு சிரமம் அளிப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : நவ 20, 2025 03:13 PM

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களுக்கு சேவை செய்யும் அறக்கட்டளை அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கேரள அரசின் அலட்சியத்தால்,ஆண்டுதோறும், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதைப் பார்ப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.
இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசின் மோசமான, தவறான நிர்வாகத்தால் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒருபுறம், பக்தர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இல்லை; மறுபுறம், ஐயப்ப சேவா சங்கம், அமிர்தானந்தமயி மடம் மற்றும் சுப்பிரமணிய மத அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தங்கள் தன்னார்வ ஆதரவை வழங்குவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.
சபரிமலை வெறும் புனித யாத்திரைத் தலம் மட்டுமல்ல; அது நம் நாட்டில் லட்சக் கணக்கான மக்கள் செல்லும் ஆன்மிகம் ஸ்தலம் ஆகும். கேரள அரசு, அதன் பொறுப்பை நேர்மையுடனும் மரியாதையுடனும் நிலைநிறுத்த வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

