பட்டப்பகலில் துணிகரம்: பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை ஊழியருடன் கடத்தி ரூ.7 கோடி கொள்ளை
பட்டப்பகலில் துணிகரம்: பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை ஊழியருடன் கடத்தி ரூ.7 கோடி கொள்ளை
UPDATED : நவ 19, 2025 06:40 PM
ADDED : நவ 19, 2025 06:37 PM

பெங்களூரு: பெங்களூருவில், பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தில் இருந்த ரூ.7 கோடியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். வரித்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜெபி நகரில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயுடன் ஏடிஎம் வேன் ஒன்று புறப்பட்டது. ஜெயாநகர், அசோக் பில்லர் அருகே வந்தபோது, சொகுசு கார் ஒன்றில் வந்த சிலர் வேனை மறித்துள்ளனர்.
மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிய அவர்கள், வேனில் உள்ள ஊழியரை மிரட்டி ரூ. 7 கோடியுடன் தங்கள் வாகனத்தில் ஏற்றினர்.
பின்னர், டெய்ரி சர்க்கிள் அருகே காரை நிறுத்தி, வங்கி ஊழியரை கீழே தள்ளிவிட்டு அருகில் உள்ள பாலத்தில் வண்டியுடன் தப்பிவிட்டனர். வினாடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
வங்கி ஊழியரிடம் விசாரணை நடத்திய போலீசார், சொகுசு வேன் பன்னார்கட்டா சாலையில் சென்றிருப்பதை ஊர்ஜிதம் செய்துள்ளனர். வேனை பிடிக்க, அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் வேனில் இருந்த ரூ.7.11 கோடியும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. பட்டப்பகலில் நிகழ்ந்த துணிகர கொள்ளையைத் தொடர்ந்து, சொகுசு வேன் எங்கிருந்து வந்தது? அதன் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை கண்டறிய, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

