டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்பு: பாக்., அரசியல்வாதி ஒப்புதல்
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்பு: பாக்., அரசியல்வாதி ஒப்புதல்
ADDED : நவ 19, 2025 06:47 PM

இஸ்லாமாபாத்: டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது என அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பழிவாங்க வேண்டும் என ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.
கடந்த 10ம் தேதி டில்லியில் செங்கோட்டையில் சிக்னல் அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருப்பது, ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பிரதமராக இருந்த அன்வருள் ஹக் கூறியதாவது: இந்தியா, பலுசிஸ்தானில் ரத்தம் ஓடவைத்தால், செங்கோட்டை முதல் காஷ்மீரின் வனப்பகுதி வரை தாக்குதல் நடத்துவோம் என முன்னரே கூறியிருந்தேன். அதனை தற்போது செய்துள்ளோம். எங்களின் தைரியமிக்க நபர்கள் அதனை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை கண்டித்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் எந்த பங்கும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

