ADDED : ஜன 18, 2025 06:40 AM
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் நேற்று முன்தினம் வங்கியின் முன் பட்டப்பகலில் 2 மர்ம நபர்கள் வங்கி ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஒரு நபர் உயிரிழந்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் மேலும் ஒரு வங்கி கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மங்களூரு அருகே உள்ள தனியார் வங்கியில் நேற்று காலை 11:30 மணிக்கு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் 5 ஊழியர்கள் மட்டுமே வங்கியில் இருந்தனர். காரில், முகமூடி அணிந்து வந்த 5 பேர் வங்கிக்குள் கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து ஊழியர்களை மிரட்டி 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் அடுத்தடுத்து வங்கி கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.