பெங்களூரு தொழிலதிபரிடம் ரூ.8.30 கோடி நுாதன மோசடி
பெங்களூரு தொழிலதிபரிடம் ரூ.8.30 கோடி நுாதன மோசடி
ADDED : டிச 16, 2025 12:57 AM

பெங்களூரு: அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, சைபர் குற்றவாளிகளின் பிடியில் சிக்கிய பெங்களூரு தொழிலதிபர், 8.30 கோடி ரூபாயை பறிகொடுத்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ராஜேந்திர நாயுடு, 71; தொழிலதிபர். இவர், தீவிர ராம பக்தர். அயோத்தி ராமர் கோவிலுக்கு, வெள்ளி பூஜை பொருட்களை காணிக்கையாக வழங்கினார். இதற்கு முன், 'ரிலையன்ஸ் கேபிடல்' நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, அந்த கடனை முழுமையாக அடைத்திருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இதே நிறுவனத்தின் பெயரில் ஒருவர், ராஜேந்திர நாயுடுவை தொடர்பு கொண்டார். 'ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம்' என ஆசை காண்பித்தார். அந்நபர்கள், மொபைல் போன் செயலியை அனுப்பி, அதை பதிவிறக்கம் செய்யும்படி கூறினர்.
தொழிலதிபரும் அதன்படி செய்தார். முதலில், 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதன்பின் அடுத்தடுத்து என மொத்தம், 8.30 கோடி ரூபாயை முதலீடு செய்தார். அந்த மொபைல் போன் செயலியில் லாபத்தொகையை ஆய்வு செய்த போது, 59.4 கோடி ரூபாய் லாபம் வந்ததாக காட்டியது. இதில் இருந்து, 15 கோடி ரூபாயை எடுக்க தொழிலதிபர் முயற்சித்தார். ஆனால் எடுக்க முடியவில்லை.
இது குறித்து, அந்நபர்களிடம் விசாரித்த போது, 'சேவை கட்டணமாக, 2.70 கோடி ரூபாய் செலுத்தினால், லாபத்தொகையை எடுக்க முடியும்' என்றனர். இதனால் சந்தேகமடைந்த தொழிலதிபர், சைபர் மோசடி தொடர்பான 1930 உதவி எண்ணில் இரண்டு நாட்களுக்கு முன் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
பெங்களூரு தெற்கு மண்டலத்தின் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, உடனடி நடவடிக்கை எடுத்தனர். சைபர் குற்றவாளிகளின் கணக்கில் இருந்த, 61 லட்சம் ரூபாயை முடக்கினர். அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

