திக்குமுக்காடிப்போனது பெங்களூரு; ஒரே நேரத்தில் ஊர் திரும்பிய மக்க ளால் நெரிசல்
திக்குமுக்காடிப்போனது பெங்களூரு; ஒரே நேரத்தில் ஊர் திரும்பிய மக்க ளால் நெரிசல்
ADDED : நவ 04, 2024 10:00 PM

பெங்களூரு; தீபாவளி விடுமுறை முடிந்து நகருக்கு வந்த வாகனங்களால் சாலைகள் மட்டுமின்றி, மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயிலில் ஏற, ஒரு கி.மீ., துாரத்துக்கு பயணியர் வரிசையில் நின்றிருந்தனர். நேற்று காலை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடிப் போனது.
தீபாவளி, கன்னட ராஜ்யோத்சவா, வார இறுதி விடுமுறை நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா
பெங்களூரில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களுக்கு கடந்த வாரம் புதன்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றனர். அத்துடன் உள்ளூரில் வசிப்பவர்களும் கூட, சுற்றுலா தலங்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த நான்கு நாட்களும் நகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெங்களூரு நகரை காண முடிந்தது.
விடுமுறை முடிந்து நகருக்கு வருவோரால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை, போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே அறிந்தனர்.
அதிகாலை முதலே...
இதையடுத்து, நேற்று அதிகாலை 2:00 மணி முதல் சுற்றுலா சென்றவர்கள், நகருக்குள் திரும்பி வரத் துவங்கினர். ஒரே நேரத்தில் பலரும் நகருக்குள் வந்ததால் நகரின் அனைத்து நுழைவு சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் திணறின.
இதனால் துமகூரு சாலை, பழைய மெட்ராஸ் சாலை, பல்லாரி சாலை, மைசூரு சாலை, ராஜ்குமார் சாலை, மெஜஸ்டிக் சுற்றுச்சாலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் பகல் 12:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்ய போக்குவரத்து போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி உள்ளே வந்த பின்னரும், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இதனால் பொறுமை இழந்த பலரும், மெட்ரோ ரயிலில் செல்ல முடிவு செய்தனர்.
1 கி.மீ.,க்கு கியூ
நாகசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற பலரும் தங்கள் உடமைகளுடன் வந்ததால் அங்கும் நெரிசல் ஏற்பட்டது. நாகசந்திராவில் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்கவே, ஒரு கி.மீ., துாரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.
துமகூரு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புதிதாக நீட்டிக்கப்பட்டுள்ள நாகசந்திரா - மாதவாரா வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவையை துவக்க கோரிக்கை விடுத்தனர்.
இளஞ்சிவப்பு, பச்சை நிற வழித்தடத்தில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பொதுமக்கள் குவிந்தனர்.
நெட்டிசன்களும், கூட்டம் படங்களை தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதுபோன்று ரயிலில் வந்தவர்களும், பஸ்சில் வந்தவர்களாலும், கெம்பே கவுடா மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்திலும் கட்டுங்கடங்காத கூட்டம் ஏற்பட்டது.
அதுபோன்று, விடுமுறை முடிந்து வாரத்தில் முதல் நாளான நேற்று பணிக்கு செல்ல பலரும் பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். ஆனால் கடும் போக்குவரத்து நெரிசலால், நீண்ட நேரம் பஸ்கள் வராமல் அவதிப்பட்டனர்.
பொறுமை இழந்த பலர், தங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து, விடுமுறை எடுத்துக் கொண்டனர். சிலர் தாமதமாக அலுவலகத்துக்குச் சென்றனர்.
ஒரே நேரத்தில் ஏற்பட்ட நெரிசலால் நகரமே திக்குமுக்காடிப் போனது.