ரூ.50 கோடி நாய் அல்ல; ரூ.1 லட்சம் மட்டுமே: அமலாக்கத்துறை சோதனையில் அம்பலம்
ரூ.50 கோடி நாய் அல்ல; ரூ.1 லட்சம் மட்டுமே: அமலாக்கத்துறை சோதனையில் அம்பலம்
UPDATED : ஏப் 18, 2025 08:39 AM
ADDED : மார் 21, 2025 01:15 PM

பெங்களூரு: உலகின் மிகவும் விலை உயர்ந்த நாயை ரூ.50 கோடிக்கு பெங்களூருவை சேர்ந்த சதீஷ் என்பவர் வாங்கியதாக தெரிவித்து இருந்தார். அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் அந்த நாய், 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவானது என்பது தெரியவந்தது.
செல்லப்பிராணிகள் வளர்க்க விரும்புவோரின் முதல் சாய்ஸ் நாய்கள் தான். நாய் வளர்ப்பை, மிகுந்த ஆர்வத்தோடு செய்பவர்கள் பலர் உண்டு. அந்த வகையில், உலகின் மிகவும் விலை உயர்ந்த நாயை ரூ.50 கோடிக்கு பெங்களூருவை சேர்ந்த சதீஷ் வாங்கி அசத்தி உள்ளார்.
நாய்களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்து வந்த இவர், இந்தியன் டாக் பிரீடர்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது இனப்பெருக்கம் செய்வதை நிறுத்தி விட்ட இவர், நாய் கண்காட்சிகளை நடத்தி கணிசமான தொகையை சம்பாதிக்கிறார்.
ஓநாய் போல தோற்றமளிக்கும் இந்த அரிய வகை நாய்க்கு கடபாம்ப் ஒகாமி என பெயர் சூட்டியுள்ளார். குறிப்பிட்ட இந்த நாய், குளிர் பிரதேசமான ரஷ்யா, ஜார்ஜியா நாடுகளை தாயகமாக கொண்டது. அடர்ந்த முடி கொண்டது. வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான திறன் கொண்டது என்பதால், ஐரோப்பிய நாடுகளில் இந்த நாய் வகை பிரபலமானது.
தனித்துவமான நாய் வாங்க விருப்பம்
ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான நாய்களை வளர்த்து வரும் பெங்களூருவைச் சேர்ந்த நாய் ஆர்வலர் சதீஷ், 51. இவர் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியது குறித்து, கூறியதாவது:
நான் நாய்களை விரும்புகிறேன், தனித்துவமான நாய்களை வைத்திருக்கவும், அவற்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தவும் விரும்புகிறேன். ஏனென்றால் இந்த நாய்க்குட்டியை வாங்க ரூ.50 கோடி செலவிட்டேன். ஒகாமியைத் தவிர, பெங்களூருவில் ஏழு ஏக்கர் பண்ணையில் 150க்கும் மேற்பட்ட நாய் இனங்களை வளர்த்து வருகிறேன்.
இந்த நாய் அரிதானவை என்பதால் நான் அவற்றை வாங்குவதற்காக அதிக பணம் செலவிட்டேன்.எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது. இதனால் நாய்களை வாங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார். ரூ.50 கோடிக்கு விலை போன நாய் கடபாம்ப் ஒகாமி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் பின்வருமாறு:
* கடபாம்ப் ஒகாமி இது ஒரு அரிய வகை இனமாகும்.
* இந்த நாய் அமெரிக்காவில் பிறந்து, எட்டு மாதம் ஆகி உள்ளது. நாய்க்கு உணவில் தினமும் 3 கிலோ இறைச்சி வழங்கப்படுகிறது.
* உலகின் மிகவும் விலையுயர்ந்த செல்ல நாய் இனங்களில் ஒன்றாகும். சதீஷ் இந்த நாயை பராமரிக்க அதிகமான பணம் செலவிட்டு வருகிறார்.
ரூ.1 லட்சம் மட்டுமே!
பெங்களூரில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நாய் வைத்துள்ளதாக, 'அளந்து' விட்டவர் வீட்டில், அமலாக்கத் துறையினர் அதிரடி 'ரெய்டு' நடத்தினர். இதில், அந்த நாய், 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவானது என்பது தெரியவந்தது. பொய் தகவல் கொடுத்த அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.