லிங்காயத் சமூக ஓட்டுகளை கைப்பற்ற பா.ஜ., - காங்., பிளான்
லிங்காயத் சமூக ஓட்டுகளை கைப்பற்ற பா.ஜ., - காங்., பிளான்
ADDED : பிப் 14, 2024 04:40 AM
சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் கர்நாடகாவின் வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பத்தில் லிங்காயத் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், அச்சமூக மடாதிபதிகளுடன் அவருக்கு நல்லுறவு இருப்பதாலும், லிங்காயத் சமூகம் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து வந்தது. இது, பா.ஜ.,வுக்கு பிளஸ் பாயின்டாக இருந்தது.
முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை, பா.ஜ., மேலிடம் இறக்கிய போது, லிங்காயத் சமூகத்தின் கோபத்தை சந்திக்க நேர்ந்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்ய, அச்சமூகத்தின் பசவராஜ் பொம்மை முதல்வர் ஆக்கப்பட்டார்.
அவர் முதல்வராக இருந்த போது, லிங்காயத் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தினர். ஆனால் '2டி' இடஒதுக்கீடே கிடைத்தது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, லிங்காயத் சமூக வேட்பாளர்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் '2ஏ' இடஒதுக்கீடு பெற்று தருவதாக கூறினர்.
காங்கிரஸ் வெற்றி
இதனால், சட்டசபை தேர்தலில் லிங்காயத் சமூகம், காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற வைத்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை '2ஏ' இடஒதுக்கீடு தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பஞ்சமசாலி சமூகத்தை கோபத்தில் ஆழ்த்தியது.
பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரஸ் வந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி, லிங்காயத் சமூக தலைவர்கள் என்பதால், இவர்கள் மூலம் லிங்காயத் ஓட்டுகளை பிடிக்கலாம் என்று காங்கிரஸ் கணக்கு வைத்து இருந்தது.
ஆனால், ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜ.,வுக்கே சென்று விட்டார். லட்சுமண் சவதியையும் இழுக்கும் முயற்சி நடக்கிறது. இதனால் தங்கள் கட்சியில் உள்ள லிங்காயத் தலைவர்களை, காங்கிரஸ் முழுக்க, முழுக்க நம்பி உள்ளது.
அரசியல் ஆலோசகர்கள்
அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் கன்ட்ரே, லட்சுமி ஹெப்பால்கர், எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பண்ணவர் உட்பட சில முக்கிய எம்.எல்.ஏ.,க்கள் மூலம், லிங்காயத் சமூக ஓட்டுகளை பெற, காங்கிரஸ் நினைத்து உள்ளது. லிங்காயத் ஓட்டுகளை கவர பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வழங்க, காங்கிரஸ் அரசு முயற்சி செய்யலாம் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
இடஒதுக்கீடு வழங்குவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை; மத்திய அரசு அனுமதி வேண்டும். இடஒதுக்கீடு வழங்க அனுமதி கொடுத்து, தங்களது ஓட்டு வங்கியை, காங்கிரசுக்கு, பா.ஜ., தாரை வார்க்காது.
இதனால், வரும் லோக்சபா தேர்தலில், லிங்காயத் சமூக ஓட்டுகளை பெற, காங்கிரஸ் என்னென்ன மாயாஜாலம் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

