தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா
தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா
UPDATED : மார் 06, 2025 03:11 PM
ADDED : மார் 06, 2025 02:58 PM

சென்னை: பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்திற்கும் இன்று ( மார்ச் 06) திருமணம் நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேஜஸ்வி சூர்யா, பா.ஜ.,வின் இளைஞரணியான யுவ மோர்ச்சாவின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 2019 ,2024 ல் பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கும், தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசைப் பாடகியான சிவஸ்ரீ சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்துக்கும் பெங்களூருவில் திருமணம் நடந்தது. சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், பயோ பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் பரத நாட்டியத்தில் பட்டம் பெற்ற இவர், சமஸ்கிருதத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் பாடல் ஒன்றை பாடி உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் போது, ராமர் குறித்து சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் பாடிய பாடலை, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டு பாராட்டி இருந்தார்.
தேஜஸ்வி சூர்யா சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தின் திருமணம் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான அரசியல் பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் சோமண்ணா, எம்.பி., சி.என். மஞ்சுநாத், பா.ஜ., தேசிய பொதுச்செயலர் பி.எல். சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதாப் சின்ஹா, அமித் மாளவியா, பிஓய் விஜேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக வலைதளங்களில் இருவரின் திருமண புகைப்படம் வெளியாக , ஏராளமானோர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.