கெஜ்ரிவால் உயிருடன் விளையாடும் பா.ஜ.,: ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
கெஜ்ரிவால் உயிருடன் விளையாடும் பா.ஜ.,: ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 13, 2024 04:06 PM

புதுடில்லி: “டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருடன் பா.ஜ.,வும், மத்திய அரசும் விளையாடுகின்றன. சிறையில் அவரது உடல் எடை 8.5 கிலோ குறைந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவும் கடுமையாக குறைந்துள்ளது,”என, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறினார். .
இது குறித்து, சஞ்சய் சிங் கூறியதாவது: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் இருந்து விரைவில் வெளியே கொண்டு வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு ஏதேனும் மோசமான சம்பவம் நடக்கலாம். அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை கைது செய்தபோது அவரது எடை 70 கிலோவாக இருந்தது. அதுவே இப்போது 61.5 கிலோவாக குறைந்துள்ளது. அதேபோல ரத்தத்தில் சர்க்கரை அளவும் கடுமையாக குறைந்துள்ளது.
உடல்நிலை
சிறைக்குள் மருத்துவப் சோதனைகள் எதுவும் செய்யாததால், எடை தொடர்ந்து குறைவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த எடை இழப்பு சில தீவிர நோய்களின் அறிகுறி என டாக்டர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவாலின் குடும்பத்தினர், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அவரது நலம் விரும்பிகள் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து கவலை அடைந்துள்ளனர். பா.ஜ., மற்றும் மத்திய அரசு கெஜ்ரிவாலை சிறையில் வைத்து அவரது உயிருடன் விளையாடுகின்றன.
சதி
அவர் சில கடும் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என சதி செய்கின்றனர். அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி விட்டது. இதே விவகாரத்தில் சி.பி.ஐ., தொடர்ந்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் கெஜ்ரிவால் இன்னும் சிறையில் இருக்கிறார். அவரை விரைவில் வெளியே அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.