என் மனைவி விஷயத்தில் பா.ஜ., அரசியல்: முதல்வர் சித்தராமையா வேதனை
என் மனைவி விஷயத்தில் பா.ஜ., அரசியல்: முதல்வர் சித்தராமையா வேதனை
ADDED : ஜூலை 10, 2024 06:38 PM

மைசூரு: ''வரும் 15ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் 'மூடா' குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிப்பேன். என் மனைவி விஷயத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி: 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. என் மனைவிக்கு, மனை ஒதுக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ., சர்ச்சையாக்குகிறது. அனைத்தும் சட்டப்படி தான் நடந்தது. வரும் 15ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் 'மூடா' குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிப்பேன்.
நிலத்தை இழந்தவர்களின் நிலை வேறு. இது, எங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய வழக்கு. எங்கள் நிலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, என் மனைவி கேட்கிறார். விஜயநகரில் எங்களுக்கு ஒரு மனை தருமாறு கேட்கவில்லை. சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என, ஆணையமே ஒப்புக் கொண்டது. அப்படி இருக்கையில், எது சட்ட விரோதம்? உங்கள் நிலத்தில் இதுபோன்று செய்தால், அமைதியாக விட்டுவிடுவீர்களா?.
மூடாவில் நடந்த நில விஷயம் குறித்து, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரிக்கின்றனர். மனை ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டோம். சட்டவிரோதம் என புகார் வந்தால், சம்பந்தப்பட்டோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.