ADDED : டிச 15, 2023 07:49 AM

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த சில ஆண்டுகளாகவே, 'தமிழகத்தின் அனைத்து நிறுவனங்களிலும் வடமாநிலத்தவர் ஆக்கிரமித்துள்ளனர்; அதனால், தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது' எனும் குரல் ஒலிக்கிறது.
எப்போதும், பிறரிடம் உள்ள நல்ல குணங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வடமாநிலத்தவர்கள், 10 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கின்றனர்; எந்த வேலையையும் செய்ய தயங்குவதில்லை. ஆனால், தென்மாநிலத்தவர்கள் அப்படி இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இலவசமாக ஏதாவது கிடைக்காதா என ஏங்குவோர் தான், இங்கு பலர் உள்ளனர்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், தென்மாநிலத்தவர்கள், இலவசங்களுக்கு மயங்கியவர்கள் என்பதை தெலுங்கானா முடிவுகள் காட்டுகின்றன. அதேநேரம், மூன்று வடமாநில மக்களும், இலவச அறிவிப்புகளுக்கு மயங்காமல், நாட்டின் எதிர்காலத்தை உணர்ந்து, பா.ஜ.,வுக்கு ஓட்டளித்துள்ளனர். ஆயினும், இது தற்காலிக வெற்றியே; வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
கடந்த 1980ல் நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., தலைமையிலான, அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது. உடனே, தி.மு.க.,வினர், 'எம்.ஜி.ஆர்., தொலைந்தார்... இனி, அவரது கட்சியும் அம்போ' என்று கிண்டல் அடித்தனர். அதன்பின், பிரதமர் இந்திராவும் அ.தி.மு.க., ஆட்சியை கலைத்தார். ஆனாலும், அசராத எம்.ஜி.ஆரும், அவரது தொண்டர்களும் கடுமையாக உழைத்ததன் வாயிலாக, அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.
மாநிலத்திலும், மத்தியிலும் யார் ஆள வேண்டும் என முடிவெடுப்பதில், வாக்காளர்கள் தெளிவாகவே இருப்பர். எனவே, மூன்று மாநில வெற்றி, லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என அலட்சியமாக இருக்காமல், பா.ஜ.,வினர் கடுமையாக உழைத்தால் தான், வெற்றி சாத்தியமாகும்.

