ADDED : டிச 15, 2024 11:48 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பிர்ஹாத் ஹக்கீம், 65, மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக உள்ளார். மேலும் இவர், கோல்கட்டாவின் மேயராகவும் பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அமைச்சரும், கோல்கட்டா மேயருமான பிர்ஹாத் ஹக்கீம் பேசியதாவது:
மேற்கு வங்க மக்கள் தொகையில் நாம் 33 சதவீதமாக உள்ளோம். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதமாக இருப்பதால், சிறுபான்மையினர் என அழைக்கப்படுகிறோம்.
ஆனால், சிறுபான்மையினராக நம்மை நாம் கருதவில்லை. இறைவனின் ஆசி இருந்தால், பெரும்பான்மையாக உள்ளவர்களை விட, அதிக பெரும்பான்மை உடைய சமூகமாக நம்மால் நிச்சயம் வர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிர்ஹாத் ஹக்கீமின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார் வெளியிட்ட பதிவு:
வெளிப்படையாக வகுப்புவாத வெறுப்பை பிர்ஹாத் ஹக்கீம் துாண்டி உள்ளார். இது, கொடிய விஷத்தன்மை உடையது.
அவரது இந்த பேச்சு, வெறுக்கத்தக்கது மட்டுமல்ல; வங்கதேசத்தில் நிலவும் நெருக்கடியை நம் நாட்டில் ஏற்படுத்த துாண்டுவது போல உள்ளது.
இதில், 'இண்டி' கூட்டணி கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? இது தொடர்பாக, அக்கூட்டணியினர் விளக்கமளிக்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்தியா எதிர்ப்பு மனநிலையைத் தான், பிர்ஹாத் ஹக்கீம் வெளிப்படுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

