பார்வையற்றோர் கிரிக்கெட் அசத்தும் கர்நாடக வீராங்கனை
பார்வையற்றோர் கிரிக்கெட் அசத்தும் கர்நாடக வீராங்கனை
ADDED : செப் 27, 2024 07:57 AM

இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும், விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது. ஆண்கள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் போட்டியை விரும்பிப் பார்த்த ரசிகர்கள், தற்போது மகளிர் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க பார்வையற்ற பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கும் தற்போது மவுசு அதிகரித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த கங்கவ்வா நீலப்பா என்ற பெண், பார்வையற்றோர் கிரிக்கெட்டில், இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
ஹாவேரியின் ஷிகாம்வி சுசுவினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கங்கவ்வா, 26. சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது இவருக்கு ஆர்வம் அதிகம். 10 வயது இருக்கும் போது இவருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால், வலது கண் பார்வை பறிபோனது. கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால், பார்வையற்றோர் விளையாடும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார்.
பெங்களூரு சென்று சமர்த்தனம் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்தார். பின், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.
சிறப்பாக விளையாடியதால், இந்திய மகளிர் பார்வையற்றோர் அணியில் இடம் கிடைத்தது. அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால், அணியின் துணை கேப்டன் பதவி தேடி வந்தது.
கடந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில், கங்கவ்வா பேட்டிங்கில் இந்திய அணிக்கு கை கொடுத்தார்.
இது குறித்து கங்கவ்வா உறவினர்கள் கூறுகையில், 'கங்கவ்வா தந்தை நீலப்பா, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரை, அவரது தாய் தான் ஊக்குவித்தார்.
'சிறுவயதில் தெருவில், சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். இப்போது இந்திய அணியில் விளையாடி உள்ளார். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது. கங்கவ்வாவுக்கு அரசு பல உதவிகள் செய்ய வேண்டும்' என்றனர். --- நமது நிருபர் --

