ஜம்மு காஷ்மீரில் மாயமான இரு ராணுவ கமாண்டோக்கள் சடலமாக மீட்பு
ஜம்மு காஷ்மீரில் மாயமான இரு ராணுவ கமாண்டோக்கள் சடலமாக மீட்பு
ADDED : அக் 11, 2025 05:38 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு பணிகளின் போது, மாயமான இரு ராணுவ கமாண்டோக்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடலுக்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தின் கடூல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டது. அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தேடும் பணி நடந்தது. இதன் பிறகு வீரர்கள் முகாம் திரும்பிய நிலையில், பாலாஷ் கோஷ் மற்றும் சுஜே கோஷ் ஆகிய இரண்டு பேர் மட்டும் திரும்பவில்லை. அந்த பகுதியில் கனமழை பெய்ததால், வானிலை மோசமாக நிலவுகிறது. இதனால், அந்த வீரர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
மாயமான வீரர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில், கோகெர்னாகின் கிஷ்ட்வார் பகுதியில் இருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.ஒருவரின் உடல் 9ம் தேதியும், மற்றொருவரும் உடல் 10ம் தேதியும் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடலுக்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து ராணுவம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில்; கடந்த அக்.,6 மற்றும் 7ம் தேதி இரவில் கடும் பனிப்புயல் வீசியது. அன்றைய இரவு முதல் இரு வீரர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. காணாமல் போன வீரர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடைபெற்றது. ஆனால், இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் வணங்குகிறோம். இந்த சோகமான வேளையில், அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம், மேலும் அவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உள்ளோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.