ADDED : பிப் 07, 2025 10:06 PM
நொய்டா:பிரபல கல்லூரி மற்றும் இரண்டு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக 'இ - மெயில்' வாயிலாக மிரட்டல் வந்தது. சோதனை நடத்தியதில் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டில்லி பல்கலையின் கீழ் இயங்கும் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, மயூர் விஹார் அல்கான் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் நொய்டா ஷிவ் நாடார் பள்ளி ஆகியவற்றுக்கு நேற்று வந்த இ - மெயிலில், கல்வி நிறுவன வளாகத்துக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
போலீஸ், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படைப் பிரிவினர் மூன்று கல்வி நிறுவனங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு காலை 7:42 மணிக்கும் அல்கான் சர்வதேச பள்ளிக்கு காலை 6:40 மணிக்கும் இந்த இ - மெயில்கள் வந்திருந்தன.
இந்தப் புரளி காரணமாக கல்லூரி மற்றும் இரண்டு பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மிரட்டல் விடுத்தவர் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.