ADDED : டிச 07, 2024 11:03 PM

சிக்கமகளூரு: அதிகாரிகள் நடத்திய பேச்சு எதிரொலியாக, தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தனர்.
சிக்கமகளூரு நரசிபுரா கிராமத்தில் குருபர் சமுதாயத்தின் 250 குடும்பங்கள், தலித் சமுதாயத்தின் 13 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் திருமலேஸ்வரர் கோவில் உட்பட ஒன்பது கோவில்கள் உள்ளன. திருமலேஸ்வரர் கோவிலில் குருபர் சமுதாயத்தினர், தினமும் பூஜை செய்கின்றனர்.
இந்த கோவிலுக்குள் பல ஆண்டுகளாக, தலித் மக்கள் நுழைவதற்கு அனுமதி கிடையாது. இதுகுறித்து, அச்சமுதாயத்தின் இரண்டு இளைஞர்கள், தாசில்தார் சுமந்திடம் அனுமதி கேட்க, அவரும் சரி என கூறினார்.
இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை பூஜை நடந்து கொண்டிருந்தபோது இருவரும் கோவிலுக்குள் சென்றனர். இதை பார்த்த மற்றொரு தரப்பினர், பூஜையை நிறுத்திவிட்டனர். இதனால் இளைஞர்கள் வருத்தம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை காலையில், போலீஸ் துணை எஸ்.பி., தாசில்தார், சமூக நலத்துறை அலுவலக அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில், இரு சமூகத்தினர் இடையே பேச்சு நடத்தினர். அசம்பாவிதத்தை தவிர்க்க, கோவிலை அதிகாரிகள் பூட்டினர்.
'ஜாதியின் அடிப்படையில், ஒருவரை கோவிலில் நுழைய தடுப்பது தீண்டாமையாகும், அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்தனர். இதன் பின்னர், நேற்று முன்தினம் முதல் தலித்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.
கோவிலுக்குள் சென்றதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.