பிளஸ் 2 மாணவர் ஓட்டிய கார் கூட்டத்தில் மோதி சிறுவன் பலி
பிளஸ் 2 மாணவர் ஓட்டிய கார் கூட்டத்தில் மோதி சிறுவன் பலி
ADDED : பிப் 14, 2026 06:32 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில், பள்ளி பிரிவு உபசார விழாவிற்கு சென்று விட்டு திரும்பிய பிளஸ் 2 மாணவர் ஓட்டி வந்த கார், கூட்டத்திற்குள் புகுந்ததில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான்; நான்கு பேர் காயம் அடைந்தனர்.
உ.பி.,யின் லக்னோவை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கவுரவ் சிங், 21. இவர், நேற்று முன்தினம் நடந்த பள்ளி பிரிவு உபசார விழாவில் பங்கேற்று விட்டு, தன் நண்பருடன் காரில் திரும்பி கொண்டிருந்தார். பந்தாரா பகுதியில் காரை ஓட்டி வந்த கவுரவ், கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது மோதினார். இதில், பைக்கில் இருந்த நபர் துாக்கி வீசப்பட்டார்.
மேலும் அருகே நின்றிருந்த ஆர்மன், சாதனா பாட்டீல், அவரது தாய் மீனா தேவி, சாதனாவின் மகன் தீக்சந்த், 6, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அந்த கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு வாகனங்கள் மீது மோதி நின்றது. காரை ஓட்டி வந்த மாணவன் கவுரவ் தன் நண்பருடன் அங்கிருந்து தப்பினார். விபத்தில் படுகாயம் அடைந்த 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் ஓட்டி வந்த காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கவுரவ் சிங்கை கைது செய்தனர்.

