ADDED : ஜூலை 23, 2025 02:13 AM
திருவனந்தபுரம்: பிரிட்டன் விமானப் படைக்கு சொந்தமான, 'எப்- - 35பி' ரக போர் விமானம், நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜூன் 14ல், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதன் மதிப்பு 924 கோடி ரூபாய்.
அமெரிக்காவின், 'லாக்ஹீட் மார்ட்டின்' நிறுவனம் தயாரித்த, இந்த போர் விமானத்தில், 'ஹைட்ராலிக்' செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பழுது பார்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனால் விமானத்தின் பாகங்களை பிரித்து, 'ஜம்போ' விமானத்தில் ஏற்றிச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பிரிட்டன் விமான பொறியாளர்கள், கேரளா வந்து பழுது பார்த்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்த பழுதுபார்க்கும் பணி முடிந்து, விமானம் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது.
பழுதான 'எப்- - 35பி' ரக போர் விமானம், 37 நாட்களாக 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு கட்டணமாக 6 லட்சம் ரூபாய் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

