UPDATED : மார் 23, 2024 06:45 PM
ADDED : மார் 23, 2024 06:05 PM

புதுடில்லி : '' டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனியின் கருத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அப்பட்டமான தலையீடு'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியா ஜனநாயக நாடு என்பது தெரியும். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அனைவரையும் போலவே, கெஜ்ரிவாலும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்பட்டவர். அனைத்து சட்ட வழிகளையும் எந்தவித தடையும் இன்றி பயன்படுத்தலாம். கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நமது நாட்டிற்கான ஜெர்மனிய துணை தூதர் ஜார்ஜ் என்ஜிவெயிலரை வரவழைத்த வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பை பதிவு செய்தது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீதித்துறை நடவடிக்கைகள் குறித்த இது போன்ற கருத்துகள், நமது சுதந்திரமான நீதித்துறையில் தலையிடுவது போன்றது.
இந்தியா துடிப்பான ஜனநாயக நாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. நாட்டில் உள்ள சட்ட ரீதியான வழக்குகளில், சட்டம் தன் கடமையைச் செய்யும். இந்த விவகாரத்தில் ஒரு தலைபட்சமான தலையீடு தேவையற்றது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரின் கருத்து இந்தியாவின் உள்விவகாரத்தில் அப்பட்டமான தலையீடு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

