இன்று துவங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
இன்று துவங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
ADDED : ஜன 28, 2026 02:51 AM

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கவுள்ள நிலையில், டில்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், புதிய வேலை உறுதி சட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. முதற்கட்ட அமர்வு, பிப்., 13 வரை நடக்கவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு, மார்ச் 9ல் துவங்கி, ஏப்., 2 வரை நடக்கிறது.
முதன்முறை
வரும் 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், பிப்., 1ல் தாக்கல் செய்கிறார்.
வரலாற்றிலேயே முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதம், பிப்., 2, 3 மற்றும் 4ல் நடக்கிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க, மத்திய அரசு சார்பில், டில்லியில் அனைத்து கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது.
பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்ட த்தில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்., -- எம்.பி.,க்கள் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி, தி.மு.க., - எம்.பி.,க்கள் பாலு, சிவா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, ராஜ்யசபா எம்.பி.,க்கள் வாசன், கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு பதில் அமலாகி உள்ள, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' சட்டம், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட் ட மாநிலங்களில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டில்லி காற்று மாசு, அமெரிக்கா வரி விதிப்பு, சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இவற்றை மத்திய அரசு நிராகரித்தது.
கூட்டத்துக்கு பின், பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய வேலை உறுதி சட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து, பார்லி.,யில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த விவகாரத்தை மீண்டும் விவாதிக்க முடியாது. நாட்டில் ஒரு சட்டம் அமலாகி விட்டால், அதை நாம் பின்பற்ற வேண்டும். அது குறித்து கேள்வி கேட்க கூடாது.
நடவடிக்கை
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சிகள் தங்களது பிரச்னைகளை குறிப்பிடலாம்.
எதிர்க்கட்சிகளின் அனைத்து கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் கேட்க அரசு தயாராக உள்ளது. அதே சமயம், சபை சுமுகமாக நடக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்.
பண மூட்டை வழக்கில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விவாதிக்க வேண்டும்! தமிழக சட்டசபையில் இருந்து, கவர்னர் வெளிநடப்பு செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. அவரது இந்த செயல்பாடு குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும். தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி மறுப்பு போன்ற விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும். -- டி.ஆர்.பாலு, தி.மு.க., - எம்.பி.,
- நமது டில்லி நிருபர் -:

