காளைகளை துரத்தும் போட்டி: மாடுகள் முட்டி 3 பேர் பலி
காளைகளை துரத்தும் போட்டி: மாடுகள் முட்டி 3 பேர் பலி
ADDED : அக் 24, 2025 05:09 AM

ஹாவேரி: கர்நாடகாவில், தீபாவளியை ஒட்டி நடத்தப்பட்ட காளை துரத்தும் போட்டியில், மாடு முட்டியதில் இரு முதியவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் ஹாவேரி, ஷிவமொக்கா, உத்தரகன்னடா உட்பட பல மாவட்டங்களில், தீபாவளியை ஒட்டி, 'ஹோரி ஹப்பா' எனும் காளைகளை துரத்தும் போட்டி நடக்கும்.
ஹாவேரியின் வீரபத்ரேஸ்வரர் கோவில் திருவிழா கமிட்டி சார்பில், நேற்று முன்தினம் காளை துரத்தும் போட்டி நடத்தப்பட்டது.
இதில், பல கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டி துவங்கியதும் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை, இளைஞர்கள் துரத்தினர்.
காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. சில காளைகள், கூட்டத்தில் இருந்து விலகி, சாலை பக்கமாக ஓடின.
இவ்வாறு விலகி சாலையில் ஓடிய காளை ஒன்று, நடந்து சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற மின் துறை ஊழியர் சந்திரசேகர் கொடிஹள்ளி, 70, என்பவரை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அதுபோன்று, போட்டியை காண தேவிஹொசூர் கிராமத்தைச் சேர்ந்த கனிசாப், 75, சென்றிருந்தார். கூட்டத்துக்குள் புகுந்த காளை, ஒரு வீட்டின் முன் நின்றிருந்த கனிசாப்பை முட்டியது. இதில், அவரது கழுத்து, மார்பில் காளையின் கொம்பு குத்தியது. இவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுபோன்று, ஹாவேரியின் திலவள்ளி கிராமத்தில் முக்கிய சாலையில் காளைகளை துரத்தும் போட்டி நடந்தது.
கூட்டத்துக்குள் புகுந்த காளை, பாரத் ராமப்பா, 24, என்பவரை முட்டியதில், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

