பங்குச்சந்தை முதலீட்டு ஆசையில் ரூ.40 லட்சம் இழந்த வியாபாரி
பங்குச்சந்தை முதலீட்டு ஆசையில் ரூ.40 லட்சம் இழந்த வியாபாரி
ADDED : மார் 06, 2025 10:52 PM
ஆர்.கே.புரம்: முதலீட்டிற்கு நல்ல வருமானம் தருவதாகக் கூறி, 40 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்மேற்கு டில்லியின் ஆர்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், சமூக வலைதளங்களில் வெளியான அறிவிப்பால் ஈர்க்கப்பட்டார். பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் ஆசையில் ஒருவரை தொடர்பு கொண்டார்.
இவருக்காக சமூக வலைதளத்தில் பிரத்யேக கணக்கு திறக்கப்பட்டது. அவர் கூறிய வங்கிக்கணக்கில் 39.50 லட்ச ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்தார். அதன்பின் வலைதளக் கணக்கை இவரால் கையாள முடியவில்லை.
கூடுதல் முதலீடு செய்தால், இழந்த பணத்தை மீட்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் உஷாரான வியாபாரி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, வியாபாரி கூறிய வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்தனர்.
பணம் சென்ற வழித்தடங்களை கண்டறிந்து, மோசடி நபர்களை அடையாளம் கண்டனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த குல்தீப் சவுத்ரி, 22, உத்தர பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த ரஞ்சய் சிங், 32, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கவுராஜ் சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.