ADDED : அக் 04, 2024 12:14 AM

புதுடில்லி: ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதில், ஆளும் பா.ஜ., - காங்., இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
ஊழல், ஜாதி வெறி, வகுப்புவாதம், உறவினர்களுக்கு அதிகாரம் ஆகியவற்றுக்கு, காங்., உத்தரவாதம் அளிக்கிறது. அக்கட்சிக்கு எப்போதுமே மக்கள் மீது அக்கறை இல்லை.
ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா, தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோர் சுயநலனுக்காக செயல்படுகின்றனர். தந்தை - மகன் சுயநலத்தால், ஹரியானா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சல், கர்நாடகா போன்ற மாநிலங்களில் காங்., ஆட்சியின் தோல்வியை மக்கள் பார்க்கின்றனர். அக்கட்சியின் கொள்கைகள் மக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் ஹரியானாவில் காங்கிரசை அவர்கள் விரும்பவில்லை.
காங்கிரசால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது. இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு மீண்டும் ஓட்டளித்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நுாஹ் மாவட்டத்தில் நேற்று நடந்த காங்., பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசியதாவது:
பா.ஜ., நிர்வாகிகள் எங்கு சென்றாலும் வெறுப்பை பரப்புகின்றனர். மொழி, மதம், ஜாதி பிரச்னையை எழுப்பி, மக்களை அவர்கள் பிளவுபடுத்துகின்றனர். இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளித்து, பா.ஜ.,வை அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் போன்ற ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரத்தை அக்கட்சி பறிக்கிறது. அரசியலமைப்பை பலகீனப்படுத்த நினைக்கும் பா.ஜ.,வை துாக்கியெறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

