ADDED : அக் 26, 2025 11:44 PM

பெங்களூரு: காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த, தமிழகத்தின் இ.வி.பி., பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூரில் வழக்கு பதிவாகி உள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் உள்ள இ.வி.பி., பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி, 45. இவரது மனைவி ஷீலா ரெட்டி; இவர் நடிகை.
சந்தோஷ் ரெட்டிக்கு தனது மகள் மூலம், பெங்களூரு சதாசிவநகரில் வசிக்கும் ஆடை வடிவமைப்பாளரான பார்வதி, 42 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு திருமணம் முடிந்து, கணவர், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கணவர் வெளியூரில் வேலை செய்வதால், இரண்டு பிள்ளைகளுடன், பார்வதி தனியே வசிக்கிறார்.
இவரும், சந்தோஷும் குடும்ப நண்பர்களாக பழகினர். 'மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்; உங்களுக்கு தெரிந்த நல்ல பையன் இருந்தால் சொல்லுங்கள்' என்று, பார்வதியிடம் சந்தோஷ் கூறி இருந்தார்.
இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் பார்வதி வீட்டிற்கு சென்ற சந்தோஷ், 'நகை, பணத்தை எடுத்து கொண்டு, என் மகள் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்' என்று கூறி கண்ணீர் விட்டு உள்ளார்.
சந்தோஷுக்கு, பார்வதி ஆறுதல் கூறி உள்ளார். அப் போது, 'உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்கிறாயா' என்று, பார்வதியிடம் சந்தோஷ் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த பார்வதி, மறுத்து விட்டார்.
'என்னை காதலிக்கா விட்டால் உன்னையும், உன் பிள்ளைகளையும் கொன்று விடுவேன்' என, சந்தோஷ் மிரட்டி இருக்கிறார்.
இதுகுறித்து கடந்த 14ம் தேதி வயாலிகாவல் போலீசில் பார்வதி புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் சந்தோஷ் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

