குடியரசு தின விழாவுக்கு மிரட்டல்: காலிஸ்தான் பயங்கரவாதி மீது வழக்கு
குடியரசு தின விழாவுக்கு மிரட்டல்: காலிஸ்தான் பயங்கரவாதி மீது வழக்கு
ADDED : ஜன 25, 2026 12:15 AM

புதுடில்லி: டில்லியில், குடியரசு தின விழாவை சீர்குலைக்கப் போவதாக மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நாடு முழுதும், 77வது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லி கடமை பாதையில் மூவர்ணக் கொடி ஏற்றி வைக்கவுள்ளார்.
தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகள் பேரணி நடைபெறும்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:
டில்லியில் மூவர்ணக் கொடி ஏற்றப் படுவதை தடுத்து நிறுத்துபவர்களுக்கும், பஞ்சாபில் ரயில் தண்டவாளங்களில் காலிஸ் தான் ஆதரவு கொடியை நடுபவர்களுக்கும், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.
டில்லியில் ரோஹிணி மற்றும் டாப்ரி பகுதிகளில், என் உத்தரவுப்படி தான் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை, 'ஸ்லீப்பர் செல்கள்' ஒட்டியுள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது கிரிமினல் சதி, தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், டில்லி சிறப்பு பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
மேலும், ரோஹிணி, டாப்ரி பகுதிகளில் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை என்பதையும் அவர்கள் உறுதி செய்தனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, டில்லி கடமை பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

