சரண் அடைந்த நக்சல்களின் வழக்கு: சத்தீஸ்கரில் அமைச்சரவை துணைகுழு அமைப்பு
சரண் அடைந்த நக்சல்களின் வழக்கு: சத்தீஸ்கரில் அமைச்சரவை துணைகுழு அமைப்பு
ADDED : டிச 10, 2025 05:29 PM

ராய்ப்பூர்: சரண் அடைந்த நக்சல்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க, சத்தீஸ்கர் அரசு, அமைச்சரவை துணை குழு அமைத்தது.
அடுத்தாண்டு மார்ச்சிற்குள் நக்சல்கள் முழுவதும் ஒழிக்கப்படுவர் என்று மத்திய அரசு, திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. மாநில அரசும், அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 10) சத்தீஸ்கர் அரசு, சரண் அடைந்த நக்சல்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளை மறு ஆய்வு செய்வதற்கும், புதிய புனர்வாழ்வு கொள்கையின் கீழ் வழக்குகளை திரும்ப பெற ஒரு அமைச்சரவை துணை குழு அமைத்துள்ளது.
அமைச்சரவை துணை குழு நோக்கங்கள்:
வன்முறையைக் கைவிட்டு, சரணடைந்த பிறகு நல்ல நடத்தை காரணத்தின் அடிப்படையில் உள்ளவர்களின் வழக்குகளை இந்தக் குழு ஆய்வு செய்து, வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்குப் பரிந்துரைக்கும்.
துணை குழு பரிந்துரைகள் இறுதி ஒப்புதலுக்காக மாநில அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும். முதலில், மாவட்ட அளவிலான குழு ஒவ்வொரு வழக்கையும் மதிப்பாய்வு செய்து, விரிவான அறிக்கையை காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பும்.
இந்த நடவடிக்கை, கடந்த மார்ச் 2025-ல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பரந்த 'சத்தீஸ்கர் நக்சல் சரணடைதல்,பாதிக்கப்பட்டோர் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை-2025'-இன் ஒரு பகுதியாகும். இந்தக் கொள்கையானது, நக்சலைட்டுகள் வன்முறையை விட்டுவிட்டு, நிதி உதவி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் பிரதான சமூகத்தில் இணைவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வன்முறையை கைவிடத் தயாராக இருப்பவர்களுக்கு மீண்டும் சமூகத்தில் இணைவதற்கான ஒரு பாதையை வழங்குவதன் மூலம், நக்சல்களுக்கு எதிராக போராடும் மாநில நடவடிக்கையில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

