கரூர் நெரிசல் வழக்கு; ஜன.,19ல் மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூர் நெரிசல் வழக்கு; ஜன.,19ல் மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்
UPDATED : ஜன 13, 2026 07:00 PM
ADDED : ஜன 12, 2026 11:55 PM

நமது நிருபர்
கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டில்லி சிபிஐ அலுவலகத்தில் விளக்கம் அளித்து விட்டு இன்று (ஜனவரி 13) மதியம் சென்னை திரும்பினார். இதனிடையே மீண்டும் 19ம் தேதி ஆஜராக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
அதிகாரிகள் விசாரணை
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்தாண்டு, செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன், டில்லியில் உள்ள, சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில், நடிகர் விஜய் மற்றும் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்தவரும், தற்போது ஆயுதப்படை டி.ஜி.பி.,யாகவும் இருக்கிற டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடம், நேற்று காலை, 11:30 மணியவில் இருந்து விசாரணை நடந்தது.
அதேபோல, சம்பவத்தின்போது மத்திய மண்டல ஐ.ஜி.,யாக இருந்தவரும், தற்போது சென்னை மாநகர போலீஸ் தலைமையிட கூடுதல் கமிஷனராகவும் உள்ள, ஜோஷி நிர்மல் குமாரிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விஜயிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், முதலில் உங்கள் பெயர் என்ன, தந்தையின் பெயர், வயது, தொழில் உள்ளிட்ட அடிப்படையான கேள்விகள் கேட்டு, அவரின் கையெழுத்தையும் பெற்றுள்ளனர்.
* கரூர் வேலுச்சாமிபுரத்தில் நீங்கள் பிரசாரம் செய்ய செல்வதற்கு முன், அந்த இடத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டத்திற்கு ஏற்ப வசதிகள் இருந்தனவா; அது குறித்து உங்களுக்கு தெரியுமா?
* நீங்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு, 10,000 பேர் தான் வருவர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்; எதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை கூறி காவல் துறையிடம் அனுமதி பெற்றீர்கள்?
* நீங்கள் பிரசாரம் செய்யும் இடத்திற்கு தாமதமாக சென்றது ஏன்; கூட்டம் அதிகமாக உள்ளது என தெரிந்து இருந்தும், வாகனத்தை விட்டு இறங்கியது ஏன்?
* நீங்கள் தாமதமாக சென்றபோதிலும், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் முன்னதாகவே தகவல் பதிவு செய்தது ஏன்; கள சூழலுக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொண்டீர்களா?
* சம்பவம் நடந்த இடத்தை விட்டு உங்களை வெளியேற்றியது யார்?இவை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆங்கிலத்தில், 'ஆம், இல்லை' என, 'டிக்' அடிக்கும் விதத்தில் எழுத்துப்பூர்மாக பதில்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் பெற்றுள்ளனர். அதேபோல, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான டேவிட்சன் தேவாசீர்வாதம், ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.
* விஜய் ஏற்கனவே பங்கேற்ற கூட்டங்களில், பல ஆயிரக்கணக்கானோர் திரண்டது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது, கரூரில், 500 போலீசாரை மட்டுமே பணியில் அமர்த்தியது ஏன்?
* த.வெ.க.,வினர் தெரிவித்த எண்ணிக்கையை விட கூட்டம் அதிகமாக வந்தபோதிலும், காவல் துறை சார்பில், அதை கட்டுப்படுத்தவும், அசாம்பவித சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
இப்படி கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பதிலளித்தனர். அவற்றை எழுத்துப்பூர்வமாக பெற்று, வாக்குமூலமாக சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர்.காவல் துறையினர் மீது த.வெ.க.,வினர் கூறிய குற்றச்சாட்டுகள், அவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையிலும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை மாலை, 6:30 மணிக்கு நிறைவு பெற்றது.
சென்னை திரும்பினார்!
விஜய்யிடம் இன்னும் ஒரு நாள் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. அந்த ஒரு நாள் விசாரணை கட்டாயம் அவரிடம் நடத்தப்படும். அதற்கு சரி என்றால் மட்டும் இன்றைய விசாரணையில் இருந்து விலக்கு அளிப்பதாக சிபிஐ அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தனர். அதை விஜயும் ஏற்றுக் கொண்டதை அடுத்து இன்று அவர் நேரில் ஆஜராகாமல் கட்சியின் பொங்கல் விழா உள்ளிட்டவற்றிற்காக சென்னை திரும்பினார்.
கட்சி நிர்வாகி விளக்கம்
இந்த விசாரணை குறித்து விஜய் உடன் டில்லி சென்று திரும்பிய தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சிபிஐ விசாரணையின் போது தவெக தலைவர் விஜய் உரிய விளக்கத்தை அளித்தார்; விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டால், அடுத்த வாரம் ஆஜராவார். இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.
ஜன.,19ல் ஆஜராக சம்மன்
விஜய் ஜனவரி 19 ல் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

