இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; விண்வெளி திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; விண்வெளி திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : செப் 18, 2024 07:14 PM
ADDED : செப் 18, 2024 04:27 PM

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சந்திரயான் -4, வெள்ளி கிரகம் ஆய்வு, சர்வதேச விண்வெளி மையம் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2023ம் ஆண்டு ஜூலை 14ல் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி திறன்களை கண்டு உலக நாடுகள் வியந்தன. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான்-4, ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டங்களை இஸ்ரோ விரைவுபடுத்தி உள்ளது.
இஸ்ரோவின் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
* நிலவில் இருந்து மண், பாறை எடுத்து வரும் சந்திரயான்4 திட்டத்தை ரூ.2,104 கோடி செலவில் செயல்படுத்தவும்
*2028ம் ஆண்டு வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய ரூ.1,236 கோடி ஒதுக்கவும்
*ரூ.20,139 கோடி செலவில் விண்வெளி மையம் அமைக்கவும், விண்வெளி துறை சார்ந்த பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.