வீடுகளில் சூரிய ஒளி 'பேனல்' திட்டம்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
வீடுகளில் சூரிய ஒளி 'பேனல்' திட்டம்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
ADDED : மார் 01, 2024 12:42 AM

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார 'பேனல்'கள் அமைப்பது மற்றும் மாதத்துக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும், 75,021 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதமர் சூரிய வீடு; இலவச மின்சார திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
17 லட்சம் நேரடி வேலை
பிரதமர் சூரிய வீடு; இலவச மின்சார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிப்., 13ல் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளுக்கு, மாதம் 300 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு அளிக்கிறது.
இத்திட்டம் வாயிலாக கூடுதலாக 30 கிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் வாயிலாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு, 72 கோடி டன் கார்பன் மற்றும் அதற்கு இணையான உமிழ்வு குறைக்கப்படும்.
இதன் வாயிலாக உற்பத்தி, போக்குவரத்து, வினியோகத் தொடர், விற்பனை, நிறுவல் மற்றும் இதர சேவை பிரிவுகளில், 17 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும்.இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 30,000 ரூபாயில் இருந்து 78,000 ரூபாய் வரை மானியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான சூரிய ஒளி மின் பேனல்களை பொருத்த, 7 சதவீத குறைந்த வட்டியில், அடமானமின்றி கடன் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மானியம்
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை குழு, இத்திட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
மேலும், 2024ம் ஆண்டு காரீப் பருவத்துக்கு, ஊட்டச்சத்து சார்ந்த பயிர்களுக்கான உரங்களான பாஸ்பேட் மற்றும் பொட்டசியம் உள்ளிட்ட உரங்களுக்கு, 24,420 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல், சிங்கம், புலி, சிறுத்தை, சிவிங்கிப் புலி போன்ற வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில், சர்வதேச அளவிலான கூட்டமைப்பை ஏற்படுத்தவும், அதற்கான தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 150 கோடி ரூபாய் ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- நமது சிறப்பு நிருபர் -

