விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு சரமாரி... கேள்வி! தவறான தகவல்களுக்கு விளக்கம் தர உத்தரவு
விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு சரமாரி... கேள்வி! தவறான தகவல்களுக்கு விளக்கம் தர உத்தரவு
UPDATED : நவ 06, 2024 01:39 AM
ADDED : நவ 06, 2024 01:38 AM

புதுடில்லி,'விக்கிபீடியா' வலைதளத்தில் ஒருதலைபட்சமான மற்றும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக தொடர்ச்சியாக புகார் வருவது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
உலக அளவில், பல்வேறு துறை பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் உட்பட எதைப் பற்றிய தகவல்கள் வேண்டுமானாலும் அவற்றை வாரி வழங்கி வந்தது, 'பிரிட்டானிக்கா' என்ற தகவல் களஞ்சிய புத்தகம். இதற்கு மாற்றாக, விக்கிபீடியா என்ற, 'ஆன்லைன்' தகவல் களஞ்சியம் 2000ம் ஆண்டு துவக்கத்தில் உருவாக்கப்பட்டது.
வரலாறு, அறிவியல், சினிமா, விளையாட்டு, அரசியல் உட்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், சம்பவங்கள் முழு விபரத்துடன் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.
உண்மைத்தன்மை
விக்கிபீடியா, பயனர்களுக்கான தகவல்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இலவசமாக வழங்கி வருகிறது. இன்றைக்கு, 5.6 கோடிக்கும் அதிகமான கட்டுரைகள், 300க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வலைதளத்தில் கிடைக்கின்றன.
இதில், 89 சதவீதத்துக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் ஆங்கிலம் தவிர இதர மொழிகளில் கிடைக்கின்றன.
உலக அளவில், மிகப்பெரிய ஆன்லைன் தகவல் களஞ்சியமாக வளர்ச்சி அடைந்துள்ள விக்கிபீடியாவில், யார் வேண்டுமானாலும் தகவல்களை பதிவேற்றம் செய்யலாம் மற்றும் திருத்தி அமைக்கலாம் என்பது பெரிய பலவீனமாக பார்க்கப்பட்டது.
இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டில்லியைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று, விக்கிபீடியா மீது கடந்த செப்டம்பரில் அவதுாறு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, 'யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களில் திருத்தங்ளை செய்யலாம் என்ற அம்சம் மிகவும் ஆபத்தானது' என, நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் உறுதி
'உள்ளடக்கத்தை பதிவேற்றும் போது அல்லது திருத்தும் போது, பயனர்கள் சட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்' என, விக்கிபீடியாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர்.
இந்நிலையில், விக்கிபீடியா தகவல்கள் குறித்து தொடர்ந்து புகார் வருவதை அடுத்து, அந்நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விக்கிபீடியாவில் உள்ள தகவல்கள் தொடர்பாக, தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன. தகவல்கள் ஒரு சார்பாகவும், தவறானவையாக இருப்பதாகவும் புகார்கள் வருகின்றன.
இதன் பக்கங்களை உருவாக்குவது, திருத்தம் செய்வது போன்ற பணியில் ஒரு சிறிய ஆசிரியர் குழு இருப்பதாக கூறப்படுகிறது. விக்கீபீடியாவை ஓர் இடைத் தொடர்பாளராக கருதாமல், ஒரு வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.