குடும்ப ஓய்வூதியத்தில் துணைவி பெயரை சேர்க்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: டில்லி உயர் நீதிமன்றம்
குடும்ப ஓய்வூதியத்தில் துணைவி பெயரை சேர்க்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: டில்லி உயர் நீதிமன்றம்
ADDED : ஜன 11, 2026 12:13 AM

புதுடில்லி: குடும்ப ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவில், 40 ஆண்டுகளாக இணைந்து வாழும் துணைவி மற்றும் அவரது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கக் கோரி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் விண்ணப்பித்த மனுவை பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு துறையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், கடந்த 2012ல் ஓய்வு பெ ற்றார். விவாகரத்து தராமல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், 1983 முதல் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அந் த பெண் மூலம் இரு குழந்தைகளும் பிறந்தனர்.
இந்தச் சூழலில், மனைவி மற்றும் மகளை தனியே தவிக்கவிட்டு, வேறொரு பெண்ணுடன் வாழ்ந்ததால், இவர் மீது 1990ல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு நான்குபடி நிலைகளுக்கான ஊதியத்தை இழந்தார்.
ஓய்வு பெறும் முன், அதாவது 2011ல் இவர் மீது மேலும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தன் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்கியதால், மாத ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பலன்கள் 50 சதவீதம் நிறுத்தி வைக்கப்பட்டது.
மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் இந்த ஒழுங்கு நடவடிக்கையை கடந்த 2018ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, அவர் தொடர்ந்த மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் மது ஜெயின் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாத ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பலனில் இருந்து நிரந்தரமாக 50 சதவீத தொகையை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை.
எனவே, 50 சதவீத ஓய்வூதியம், பணிக்கொடை நிறுத்தப்பட்ட காலத்தில் இருந்து தற்போதைய தேதி வரை, ஆறு சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு மீண்டும் வழங்க உத்தரவிடுகிறோம்.
துணைவியுடன் இருந்த உறவை அவர் எந்தக் காலத்திலும் மறைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
மனுதாரர் எல்லா நேரங்களிலும் தன் உறவு குறித்து வெளிப்படைத் தன்மையை பேணி இருக்கிறார். தவறான தகவல்களை அளித்து, பாஸ்போர்ட் பெற வேண்டும் என்ற தீய நோக்கமும் அவரிடம் இல்லை என கருதுகிறோம்.
மனுதாரருக்கு தனிப்பட்ட நேர்மை இல்லை என்ற ஒழுங்கு நடவடிக்கை துறையின் வாதமும் ஏற்கும்படியாக இல்லை.
எனவே, துணைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களை ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவிலும், சுகாதார வசதிகளை பயன்படுத்திக் கொள்வதிலும் சேர்க்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

