ஓராண்டு கழித்து கெஜ்ரிவாலுக்கு அரசு இல்லம்: மத்திய அரசு ஒதுக்கீடு
ஓராண்டு கழித்து கெஜ்ரிவாலுக்கு அரசு இல்லம்: மத்திய அரசு ஒதுக்கீடு
ADDED : அக் 07, 2025 12:15 PM

புதுடில்லி: டில்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஓராண்டு காத்திருப்புக்கு பின்னர் அவருக்கு தற்போது வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த தருணத்தில், மக்களை சந்தித்து, மீண்டும் முதல்வராக பதவியேற்பேன் என்று கூறினார். கடந்தாண்டு செப்டம்பரில் அவர் தமது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் கடந்தாண்டு அக்டோபர் மாதம், தமது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். அதன் பின்னர் கட்சியின் ராஜ்ய சபா எம்பி அசோக் மிட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் தங்கி வருகிறார்.
தமக்கு டில்லியில் வீடு ஒதுக்கி தர மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி அவரது கட்சி சார்பில், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளதால் வீட்டை அவசியம் ஒதுக்கி தருமாறும் கேட்கப்பட்டு இருந்தது.
அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் 10 நாட்களுக்குள் பொருத்தமான வீடு ஒதுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந் நிலையில், அவருக்கு எண் 95, லோதி எஸ்டேட் என்ற முகவரியில் அமைந்திருக்கும் Type VII வகையான வீட்டை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
Type VII வகையான இந்த வீட்டில் 4 படுக்கை அறைகள், பெரிய புல்வெளி, வாகன நிறுத்தமிடம், 4 பணியாளர்கள், அலுவலக உபயோகத்திற்கு என்று பிரத்யேக இடம் ஆகியவை இருக்கும். தோராயமாக இந்த அரசு இல்லத்தின் பரப்பளவு 5000 சதுர அடியாகும். அரசு ஒதுக்கீடு செய்த இந்த இல்லத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் விரைவில் குடியேற உள்ளார்.
முன்னதாக, அர்விந்த் கெஜ்ரிவால், உ.பி முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி குடியிருந்த எண் 35, லோதி எஸ்டேட் என்ற முகவரியை கொண்ட வீட்டை தருமாறு கோரியிருந்தார்.
இந்தாண்டு தொடக்கத்தில் மாயாவதி இந்த இல்லத்தை காலி செய்திருந்தார். கடந்த ஜூலையில் இதே இல்லம், மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது, குறிப்பிடத்தக்கது.