ADDED : மே 15, 2025 12:12 AM
புதுடில்லி: 'அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு புதிய பெயர்களை வைப்பதால், நிலைமை மாறாது. அது எப்போதும் இந்தியவின் ஒரு மாநிலமே' என, சீனாவுக்கு மத்திய அரசு மீண்டும் கண்டிப்புடன் கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, தன் நாட்டின் ஒரு பகுதி என, நம் அண்டை நாடான சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஜங்னான் என்றும் அதற்கு பெயரிட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் மலைகள், நதிகள் உட்பட, அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயர்களை சீன ராணுவம் வெளியிட்டது. அப்போதும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சீன விமானப் போக்குவரத்துத் துறை, அருணாச்சல பிரதேசத்தின், 27 இடங்களுக்கு புதிய பெயர்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
சீனாவுக்கு பலமுறை கூறியுள்ளோம். அருணாச்சல பிரதேசம் முன்பும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே.
அதில் எந்த மாற்றமும் கிடையாது. அங்குள்ள சில இடங்களுக்கு புதிய பெயர்களை வைப்பதால், கள நிலவரம் மாறாது என்பதை சீனாவுக்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சீனா தொடர்ந்து இதுபோன்ற வீண் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த முயற்சிகளுக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.