சத்திரம் விமான தளம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
சத்திரம் விமான தளம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
ADDED : மே 23, 2025 02:34 AM

மூணாறு,:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரத்தில் அமைக்கப்படும் விமான தளம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
சத்திரத்தில் தேசிய மாணவர் படையினர் பயிற்சி பெறும் வகையில் விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மாநிலத்தில் முதன் முறையாக பொதுபணித்துறையினர் செய்தனர். 800 மீட்டர் நீளத்தில் ஓடுதளம், நான்கு சிறிய ரக விமானங்கள் நிறுத்தவதற்கு இடவசதி, 50 மாணவர்கள் தங்குவதற்கு விடுதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. விமானம் தரையிறங்கும் சோதனை ஓட்டம் இருமுறை நடந்தது. ஆனால் ஓடுதளம் அருகில் உள்ள மண் திட்டுகளால் சிறிய ரக விமானங்கள் தரையிறங்க இயலாமல் தோல்வி ஏற்பட்டது. இறுதியில் 2022 டிசம்பரில் தேசிய மாணவர் படையின் இரண்டு இருக்கைகளைக் கொண்ட வைரஸ் எஸ்.டபிள்யூ., 80 ரக விமானம் வெற்றிகரமாக தரை இறக்கியது.
தடங்கல் :
விமான தளம் அமைக்க வழங்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என வனத்துறையினர் சொந்தம் கொண்டாடினர். மேலும் மண்திட்டுகளை அகற்றவும், 2022 ஜூலையில் பெய்த மழையில் ஓடு தளத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கவும் தடங்கல் ஏற்பட்டது. ஆனால் நிலம் தொடர்பாக வனத்துறை இறுதி அறிவிப்பு வெளியிடாததால் சம்பந்தப்பட்ட நிலத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு திரும்ப பெற அரசு முடிவு செய்தது. அதற்கு சட்டத்துறை, அட்வகேட் ஜெனரல் ஆகியோரிடமிருந்து சாதகமான முடிவுகள் வந்தன. அதன்படி வனம், வருவாய், உயர் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் விரைவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளனர்.
ஆய்வு:
வனத்துறையின் தடை நீங்கியதால் தேசிய மாணவர் படை கூடுதல் இயக்குனர் ஜெனரல் ரமேஷ்சண்முகம் தலைமையில் அதிகாரிகள் விமான தளத்தில் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினர். அதனால் விமான தளம் பணிகள் பூர்த்தி செய்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு:
தேசிய மாணவர் படை சார்பில் ரூ.24 கோடி நிதி விமான தளம் அமைக்க அரசிடம் வழங்கப்பட்டது. இதுவரை ரூ.14 கோடி செலவிடப்பட்ட நிலையில் ஓடு தளம் சீரமைப்பு பணிகள் செய்ய பொதுப்பணித்துறையினர் டெண்டர் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தனர். அப்பணிகளுக்கு ரூ.6.5 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.