ADDED : மார் 05, 2024 06:51 AM
கர்நாடகா தொகுதிகளில் தேர்தல் பரபரப்பு நிலவுகிறது. ஆனால் சிக்கோடியில் அரசியல் பரபரப்பு தென்படவில்லை.
பெலகாவி மாவட்டம், கர்நாடகாவின் பிரபலமான மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்ட அரசியல், நாட்டின் கவனத்தை ஈர்க்கக் கூடியது. இங்கு ம.ஜ.த., கணக்கிலேயே இல்லை. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நடக்கும் தொகுதியாகும். இரண்டு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.
அமைச்சர்கள் தயார்
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் பெலகாவி களை கட்டியுள்ளது. மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர் தேர்தலுக்கு தயாராகின்றனர்.
இந்த தொகுதியில் தன் மகனுக்கு சீட் பெற, லட்சுமி ஹெப்பால்கர் முயற்சிக்கிறார். இதை தடுக்க சதீஷ், திரைமறைவில் முயற்சிக்கிறார்.
யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது, வேட்பாளர் பட்டியல் வெளியான பின் தெரியும்.
பெலகாவியில் அரசியல் பரபரப்பு இருந்தாலும், மாவட்டத்தின் சிக்கோடி லோக்சபா தொகுதியில், இத்தகைய பரபரப்பை காண முடியவில்லை. இங்கு பா.ஜ.,வின் அன்னா சாஹேப் ஜொல்லே எம்.பி.,யாக உள்ளார். இம்முறையும் சீட் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறார்.
இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய ஒருங்கிணைப்பு செயலர் சந்தோஷ் என, மற்ற தலைவர்களுடன் நல்லுறவு வைத்துள்ளார். அன்னா சாஹேபின் ஜொல்லே மனைவி சசிகலா ஜொல்லே எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்பு, சிக்கோடி எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயபுராவின் இன்னாள் எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி, மூன்று முறை வெற்றி பெற்றார். 2009ல் தொகுதி பிரிக்கப்பட்ட பின், இந்த தொகுதி பொது தொகுதியானது.
சிக்கோடி தொகுதியில், பிரபாகர் கோரேவும் சீட் எதிர்பார்க்கிறார். தனக்கு இல்லையென்றாலும், மகன் அமித் கோரேவுக்கு சீட் தரும்படி பா.ஜ., மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லட்சுமண் சவதி
சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.,வை விட்டு விலகி காங்கிரசுக்கு சென்ற லட்சுமண் சவதியை, மீண்டும் பா.ஜ.,வுக்கு அழைத்து வந்து, சிக்கோடி தொகுதியில் களமிறக்க முயற்சி நடக்கிறது.
பா.ஜ., யாருக்கு சீட் கொடுக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பின், சிக்கோடி தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரசிலும் சீட்டுக்கு பலத்த போட்டி உள்ளது.
சிக்கோடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் லட்சுமண் ராவ் ஜிங்களே, முன்னாள் அமைச்சர் வீரகுமார் பாட்டீல், மகேஷ் ஹட்டிஹொளி உட்பட பலர் சீட் எதிர்பார்க்கின்றனர்.
எம்.எல்.சி., பிரகாஷ் ஹுக்கேரியை களமிறக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் இவர், 'நான் பலியாடு ஆகமாட்டேன்' என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பெலகாவியில் லோக்சபா தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது என்றாலும், சிக்கோடியில் இன்னும் சூடுபிடிக்கவில்லை.
- நமது நிருபர் -

