ADDED : பிப் 16, 2024 07:16 AM

பெங்களூரு: அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வோருடன் கைகோர்ந்து செயல்படுவதாக, கொப்பால் கலெக்டர் நளின் அதுல் மீது, பெங்களூரு சி.பி.ஐ., அலுவலகத்தில், சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி புகார் அளித்துள்ளார்.
கொப்பால் அருகே நாராயண்பேட், ராஜாராம்பேட் கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டி, சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. வனத்துறை, வருவாய்த்துறையின் நிலங்களை ஆக்கிரமித்து, சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, கொப்பால் கலெக்டர் நளின் அதுல், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து மூன்று சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, கலெக்டர் நளின் அதுல் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர், பெங்களூரு சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில், ''கொப்பாலில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, மூன்று சொகுசு விடுதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, கலெக்டர் நளின் அதுல் உத்தரவிட்டும் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதை பார்க்கும் போது, கலெக்டர், அதிகாரிகள், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வோருடன் கைகோர்த்து செயல்படுவது தெரிகிறது. இதனால் கலெக்டர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறி உள்ளார்.