முற்றிலும் ஒரு விபத்து, அரசியல் இல்லை: அஜித் பவாரின் விமான விபத்து குறித்து சரத் பவார் வேதனை
முற்றிலும் ஒரு விபத்து, அரசியல் இல்லை: அஜித் பவாரின் விமான விபத்து குறித்து சரத் பவார் வேதனை
UPDATED : ஜன 28, 2026 10:31 PM
ADDED : ஜன 28, 2026 08:36 PM

மும்பை: முற்றிலும் ஒரு விபத்து, அரசியல் இல்லை என அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு குறித்து சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
மஹா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சிறிய ரக விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அஜித் பவார் விமான விபத்தில் இறந்த தகவல், உடல் நலம் குன்றி மும்பை வீட்டில் ஓய்வில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அஜித் பவாரின் சித்தப்பாவுமான சரத் பவாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், தன் மனைவி பிரதிபா உடன் பாரமதி புறப்பட்டு சென்றார்.
சரத் பவார் இரங்கல்
சரத் பவார் கூறுகையில், இது மஹாராஷ்டிராவிற்கு ஒரு பெரிய இழப்பு, என்றார். இந்த விபத்தில் ஏதேனும் சதித்திட்டம் இருக்கலாம் என பரவிய வதந்திகளை நிராகரித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
நடந்த சம்பவம் துயரமானது
சிலர் இந்த சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். இதில் எந்த அரசியலும் இல்லை, விமான விபத்து முற்றிலும் ஒரு விபத்து. இந்த இழப்பின் வலியை மஹாராஷ்டிராவில் உள்ள நாம் அனைவரும் உணர்கிறோம்.
தயவுசெய்து, இதில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்.இது முழு மஹாராஷ்டிராவிற்கும் ஒரு இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்

