தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஒரே நேரத்தில் தேர்தல்: ராம்நாத் குழு பரிந்துரை

ஒரே நேரத்தில் தேர்தல்: ராம்நாத் குழு பரிந்துரை

ஒரே நேரத்தில் தேர்தல்: ராம்நாத் குழு பரிந்துரை


UPDATED : மார் 16, 2024 12:22 AM

ADDED : மார் 14, 2024 11:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2024 12:22 AM ADDED : மார் 14, 2024 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்தலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்திய அரசியலை அடியோடு புரட்டிப் போடக்கூடிய இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை, 19,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் குழு விவரித்துள்ளது.

லோக்சபா, சட்டசபை மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பரில் உயர்நிலை குழுவை மத்திய அரசு அமைத்தது.

65 கூட்டங்கள்


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், லோக்சபா முன்னாள் செயலர் சுபாஷ் கஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் குழுவில் இடம்பெற்றனர்.

இந்த குழு ஆறு மாதங்களில் நாடெங்கும் 65 கூட்டங்களை நடத்தி, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது; பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான யோசனைகளை சேகரித்தது.

பிரச்னைகள்


அதன் முடிவில், 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. அதை ஜனாதிபதியிடம், முன்னாள் ஜனாதிபதி நேற்று வழங்கினார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

நாடு சுதந்திரம் அடைந்த பின், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடந்தது. காலப்போக்கில் பல காரணங்களால் அது மாறியது. ஒவ்வொரு சட்டசபைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் தேர்தல் நடப்பதால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் வெவ்வேறு மாநிலங்களில் வேறு வேறு காலங்களில்நடக்கின்றன.

எங்காவது ஏதாவது தேர்தல் நடக்காத ஆண்டே இல்லை என்பதால், தொழில்கள் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. வழிகாட்டு விதிகளை அடிக்கடி அமல்படுத்துவதால், அரசு நிர்வாகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. அடுத்தடுத்து தேர்தல் நடப்பதால் அரசுக்கும், கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிகம் செலவாகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

இந்த பிரச்னை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சிகளின் கருத்தும் கேட்கப்பட்டது. 47 கட்சிகள் கருத்து தெரிவித்தன. காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமுல் காஙகிரஸ், சமாஜ்வாதி உட்பட 15 கட்சிகள், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 32 கட்சிகள், இது நல்ல யோசனை என ஆதரவு தெரிவித்துள்ளன. பலமுறை நினைவூட்டல் அனுப்பியும், 15 கட்சிகள் எந்த கருத்தும் கூறவில்லை.

கருத்து தெரிவித்தவர்களில் 85 சதவீதம் பேர் ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்த திட்டத்தை அடுத்து, வரவிருக்கும் ஏதேனும் ஒரு லோக்சபா தேர்தலில் இருந்து செயல்படுத்தலாம். அந்த ஆண்டில் லோக்சபாவுடன் அனைத்து சட்டசபைகளின் ஆயுட்காலமும் முடிவுற்றதாக கணக்கிட வேண்டும். இதன் விளைவாக, சில மாநில சட்டசபைகள் ஐந்தாண்டு காலத்தை முடிக்காமலே கலைக்கப்படலாம்.

லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும். அதற்கான சட்ட திருத்தத்துக்கு மட்டும், பாதிக்கு மேலான மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.

லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி ஆகிய மூன்று தேர்தலுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு ஒரே அடையாள அட்டை போதும். அரசியல் சட்டத்தில் இதற்காக சில திருத்தங்கள் செய்ய வேண்டும். அவை, லோக்சபா மற்றும் சட்டசபைகளின் ஆயுட்காலம் சம்பந்தப்பட்டவை. அந்த திருத்தங்களை பார்லிமென்ட் நிறைவேற்றலாம். மாநில சட்டசபைகள் அதை ஏற்று, தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய சட்டரீதியான அவசியம் இல்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்

கடந்த 1983ல் தேர்தல் கமிஷன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்துள்ளது சட்ட கமிஷனின் 1999, 2015, 2018 ஆண்டறிக்கைகளில் இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்த தேசிய கமிஷன், 2002ல் வெளியிட்ட அறிக்கையில் ஒரே நேரத்தில் தேர்தல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சட்டத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, 2015ம் ஆண்டில் பரிந்துரைத்துள்ளது மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிடி ஆயோக், 2017ல் பரிந்துரை செய்துள்ளது.



7 நாடுகளில் உள்ள நடைமுறை

தென் ஆப்ரிக்கா, ஸ்வீடன், பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில், பார்லிமென்டிற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகின்றன.



கட்சிகள் அமோக ஆதரவு

உயர்நிலை குழு 62 கட்சிகளிடம் கருத்து கேட்டது. அதில், 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன; 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன; மீதமுள்ள 15 கட்சிகள் எந்த கருத்தும் சொல்லவில்லை.தேசிய கட்சிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜ., மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.மாநில கட்சிகளில் திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி எதிர்ப்பு தெரிவித்தன. அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் ஆதரவு தெரிவித்துள்ளன.பாரத் ராஷ்ட்ரீய சமிதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாடு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எந்த பதிலையும் அனுப்பவில்லை.



நீதிபதிகள் ஆதரவும், எதிர்ப்பும்

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், சரத் அரவிந்த் பாப்டே, யு.யு.லலித் ஆகியோர், ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆறு பேர் ஆதரவாகவும், மூன்று பேர் எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் நான்கு பேரும், ஒரே தேர்தலை வரவேற்றுள்ளனர்.தற்போதுள்ள மற்றும் ஓய்வு பெற்ற மாநில தலைமை தேர்தல் கமிஷனர்களில் ஏழு பேர் ஆதரவு தெரிவித்தனர். தமிழக தேர்தல் கமிஷனர் பழனிகுமார் சில பிரச்னைகளை சுட்டிக் காட்டியுள்ளார்.



2029ல் அமலுக்கு வருமா?

ஒரே நேரத்தில் திட்டத்தை எப்போது செயல்படுத்தலாம் என்பதை குழு பரிந்துரைக்கவில்லை. அடுத்து வரும் 2029 லோக்சபா தேர்தலில் இது நடைமுறைக்கு வரும் என வைத்துக் கொண்டால், அனைத்து மாநில சட்டசபைகளின் ஆயுளும் அதோடு முடிவுக்கு வரும். மத்திய, மாநில ஆட்சிகள் அனைத்தும் 2034 வரை தொடர முடியும். அதற்கு முன்னதாக ஏதாவது மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால், அந்த மாநிலத்தில் புதிதாக சட்டசபை தேர்தல் நடத்தலாம். ஆனால், அதில் வெற்றி பெறும் கட்சி ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய முடியாது. லோக்சபாவின் காலம் முடியும்போது, அந்த சட்டசபையின் ஆயுளும் முடிந்துவிடும்.ஆட்சி கவிழ்ப்பு, தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி போன்ற காரணங்களால், லோக்சபா அல்லது சட்டசபையில் ஆளுங்கட்சி தோற்றாலும் இதே கணக்கை தான் பின்பற்ற வேண்டும்.

- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us